மழை பாதிப்பு பற்றி ஆய்வு செய்ய தமிழகம் வருகிறது மத்திய குழு!

தமிழகத்தில் பெய்த கனமழையால் பல மாவட்டங்கள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளது. இதனை நேரில் ஆய்வு செய்வதற்காக மத்திய குழு இன்று (நவம்பர் 21) தமிழகம் வருகிறது.

Update: 2021-11-21 04:53 GMT

தமிழகத்தில் பெய்த கனமழையால் பல மாவட்டங்கள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளது. இதனை நேரில் ஆய்வு செய்வதற்காக மத்திய குழு இன்று (நவம்பர் 21) தமிழகம் வருகிறது.

வடகிழக்கு பருவமழை பெய்யத்தொடங்கிய நாளில் இருந்து தமிழகம் முழுவதும் மிகத்தீவிரமாக மழை பெய்து வருகிறது. இதனை தொடர்ந்து வங்ககடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு அருகே கரையை கடந்தது. இதன் காரணமாக சென்னை, புறநகர் பகுதிகள் மற்றும் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மிகத்தீவிரமாக மழை பெய்தது. இதனால் சென்னை உட்பட பல மாவட்டங்கள் வெள்ளநீரில் தத்தளித்தது.

மேலும், டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் தென்மாவட்டமான கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களிலும் கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் பல லட்சம் ஏக்கர் பரப்பளவில் தீண்ணிரால் மூழ்கியது. அறுவடைக்கு தயாரான நெற்பயிர்களும் தண்ணீரில் மூழ்கி அழுகத்தொடங்கியது. இதனால் விவசாயிகளுக்கு பல லட்சம் அளவிற்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இது பற்றிய சேதவிவரங்களை தமிழக அரசு மத்திய அரசுக்கு சமர்ப்பித்தது. இதனையடுத்து தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய குழுவை அனுப்பி வைப்பதாகவும், அந்த குழு அளிக்கின்ற அறிக்கையின் அடிப்படையில் பேரிடர் நிதி ஒதுக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதி அளித்திருந்தார்.

இந்நிலையில், மத்திய உள்துறை இணைச்செயலாளர் ராஜீவ் சர்மா தலைமையிலான 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவில் மத்திய நிதித்துறை செலவின பிரிவு ஆலோசகர் ஆர்.பி.கவுல், மத்திய வேளாண்மைத்துறை பிரிவு இயக்குனர் விஜய் ராஜ்மோகன், மற்றும் மத்திய நீர்வள அமைச்சகரத்தின் நீர் ஆணையத்தின் இயக்குனர் ஆர்.தங்கமணி, மத்திய எரிசக்தித்துறை உதவி இயக்குனர் பாவ்யா பாண்டே உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.

இந்த குழுவினர் இன்று (நவம்பர் 21) ஞாயிற்றுக்கிழமை மழை பாதிப்புகளை ஆய்வு செய்வதற்கு தமிழகம் வருகிறது. மழையால் பாதிக்கப்பட்ட 11 மாவட்டங்களில் இக்குழு நேரடியாக ஆய்வுகளை மேற்கொள்கிறது. இதன்பின்னர் முதலமைச்சர் ஸ்டாலினுடன் ஆலோசனை செய்கிறது. இதனையடுத்து அதிகாரிகள் மழை பாதிப்புகள் அடங்கிய சேத விவரங்களை மத்திய அரசிடம் சமர்ப்பிக்க உள்ளது. இதன் பின்னர் தமிழகத்திற்கு மத்திய அரசு பேரிடர் நிதியை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Source, Image Courtesy: Daily Thanthi


Tags:    

Similar News