கோயில் சொத்துக்களுக்கு உரிய வாடகை வசூல் செய்யாத அறநிலையத்துறைக்கு ரூ.1.50 லட்சம் அபராதம்: ஐகோர்ட் அதிரடி!

Update: 2022-07-28 10:39 GMT

சென்னை, சூளையில் உள்ள சொக்கவேல் சுப்பிரமணியர் கோயிலுக்கு சொந்தமான சொத்துக்களை குத்தகைக்கு எடுத்த தனி நபர்கள், நீண்ட காலம் வாடகை செலுத்தாமல் இருந்துள்ளனர். இதனையடுத்து சுகுமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு விசாரணையின்போது சம்பந்தப்பட்ட தனிநபர்களுக்கு எதிராக அறநிலையத்துறை சட்டத்தின் வாயிலாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறநிலையத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. அதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி நடவடிக்கையை விரைவுபடுத்த கடந்த 2021ம் ஆண்டு ஜூன் மாதம் உத்தரவு பிறப்பித்திருந்தார்.

இந்நிலையில், இந்த உத்தரவை அமல்படுத்தவில்லை என்று சுகுமார் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில் அறநிலையத்துறை உதவி ஆணையர் தாக்கல் செய்த அறிக்கையில், கோயில் சொத்தை குத்தகைக்கு எடுத்திருந்த தனி நபர்களுக்கு எதிராக விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், வேண்டும் என்றே நீதிமன்ற உத்தரவை அவமதிக்கின்ற எண்ணம் இல்லை என குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி அனிதா சுமந்த், நீதிமன்ற உத்தரவை அமல்படுத்துவதற்கு ஏற்பட்ட காலதாமதத்திற்கான காரணங்களை உதவி ஆணையர் தன்னுடைய அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை. மேலும், நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாதது பற்றியும் உதவி ஆணையம் வருத்தம் கூட தெரிவிக்கவில்லை.

எனவே இவரது நடவடிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறிய நீதிபதி, இந்து சமய அறநிலையத்துறை ஆணையருக்கு ஒரு லட்சமும், உதவி ஆணையருக்கு ரூ.50 ஆயிரமும் அபராதம் விதித்து உத்தரவிட்டார். இதனை இரண்டு வாரங்களிலும் சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு வழங்க வேண்டும் என நீதிபதி தனது தீர்ப்பில் கூறினார்.

Source, Image Courtesy: Maalaimalar

Tags:    

Similar News