துப்புரவு பணியாளர்கள் தரையில் அமர வைத்து தி.மு.க. சேர்மன், ஆணையர் மட்டும் நாற்காலியில் அமர்ந்து கூட்டம்!

Update: 2022-05-19 15:30 GMT

திருப்பூர் நகரில் துப்புரவு பணியாளர்களை தரையில் அமர வைத்து சேர்மன், மற்றும் ஆணையர் நாற்காலியில் அமர்ந்து கொண்டு கூட்டத்தை நடத்தியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம், தாராபுரம் மத்திய பேருந்து நிலையம் அருகே கடந்த வாரம் சாக்கடை கழிவுகளை வெறும் கைகளினால் துப்புரவு பணியாளர்கள் அகற்றிய தொடர்பான வீடியோ வெளியாகி பேசும்பொருளாக மாறியது. இதனை தொடர்ந்து உரிய உபகரணங்களை வழங்காத அதிகாரிகளுக்கு கண்டனங்கள் எழுந்தது.

இந்நிலையில், தாராபுரம் நகராட்சியில் பணியாற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துகின்ற வகையில், தாராபுரம் நகராட்சி அலுவலகத்தில் துப்புரவு பணியாளர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் ஒன்று நடைபெற்றது.

அப்போது அந்த கூட்டத்தில் சேர்மன் பாப்பு கண்ணன், நகராட்சி ஆணையர் ராமர் இரண்டு பேர் மட்டும் நாற்காலியில் அமர்ந்து கொண்டிருந்தனர், துப்புரவு பணியாளர்கள் அனைவரும் தரையில் அமர வைக்கப்பட்டனர். அப்போது ஏராளமான இருக்கைகள் இருந்தும் துப்புரவு தொழிலாளர்கள் அமர வைக்கவில்லை. தற்போது இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இச்செயலுக்கு பலர் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

Source, Image Courtesy: News 18 Tamilnadu

Tags:    

Similar News