தமிழக மக்களிடையே குறையும் கொரோனா எதிர்ப்பு சக்தி.. அரசு நடத்திய ஆய்வில் அதிர்ச்சி தகவல்.!
அனைவருக்கும் தடுப்பூசி போடும் பணியை மத்திய அரசு துரிதப்படுத்தியது. இதன் காரணமாக தொற்று எண்ணிக்கை தமிழகத்தில் சற்று குறைய தொடங்கியது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் 2 அலை காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதிகப்படியாக தொற்று எண்ணிக்கை 30 ஆயிரத்தை கடந்து பதிவாகியது. மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழகத்தில் தொற்று வேகமாக பரவியது. இதனை கட்டுப்படுத்துவதற்காக அனைவருக்கும் தடுப்பூசி போடும் பணியை மத்திய அரசு துரிதப்படுத்தியது. இதன் காரணமாக தொற்று எண்ணிக்கை தமிழகத்தில் சற்று குறைய தொடங்கியது.
இதனிடையே, பொதுமக்களிடையே ஏற்பட்டுள்ள கொரோனா எதிர்ப்பு சக்தி குறித்து பொது சுகாதாரத்துறை இயக்குனர் தலைமையில் மீண்டும் ஆய்வு நடத்தப்பட்டது. இதற்காக சென்னையை தவிர்த்து மற்ற அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தொற்று அதிகம் பாதித்த, 765 இடங்கள் அடையாளம் காணப்பட்டது.
இதில் ஊரகப்பகுதி என்றால் ஒரு கிராமம், நகர்ப்புறமாக இருந்தால் ஒரு தெரு என்று தேர்ந்தெடுக்கப்பட்டு, தலா 30 பேரிடம் மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. அவ்வாறு பெறப்பட்ட 22,905 மாதிரிகள் அனைத்தும் சென்னை, மதுரை, திருநெல்வேலி, சேலம், திருச்சி மற்றும் கோவை உள்ளிட்ட இடங்களில் உள்ள பரிசோதனை மையங்களில் ஆய்வு நடத்தப்பட்டது.
இந்த சோதனையில் 23 சதவிகிதம் பேருக்கு மட்டுமே நோய் எதிர்ப்பு சக்தி இருப்பது தெரியவந்துள்ளது. இதில் திருவள்ளூர் மாவட்டத்தில் 49 சதவிகிதம் பேருக்கும், குறைந்தபட்சமாக நாகை மாவட்டத்தில் 9 சதவிகிதம் பேரும் நோய் எதிர்ப்பு சக்தியை பெற்றுள்ளனர். அதே போன்று கடந்த ஆண்டு 22,690 மாதிரிகள் பரிசோதனை நடத்தப்பட்டதில் 31 சதவிகிதம் பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி பெற்றிருந்தனர்.
இதனிடையே ஐந்து மாத இடைவெளியில் நடத்திய இரண்டு ஆய்வுகளில், தமிழக மக்களிடையே கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி 8 சதவிகிதம் அளவுக்கு குறைந்துள்ளது தெரியவந்துள்ளது.