கோவையில் கொட்டித்தீர்த்த கன மழை.. ஆறுகளில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம்.!

கோவையில் கொட்டித்தீர்த்த கன மழை.. ஆறுகளில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம்.!

Update: 2020-11-18 08:37 GMT

கோவையில் இன்று மழை தீவிரமடைந்துள்ள நிலையில், சாலைகளில் வெள்ளம் சூழ்ந்து காணப்படுகிறது. கோவை மாவட்டத்தில் பருவமழை தீவிரமடைந்துள்ளது.

தாமதமாக மழை தொடங்கினாலும், கனமழையாக பெய்ததால், விவசாயிகள் அனைவரும் மகிழ்ச்சியடைந்தனர். நொய்யலில் மழைநீர் காட்டாற்று வெள்ளமாக பெருக்கெடுத்ததால், சித்திரைச்சாவடி ஒன்று, இரண்டு அணைக்கட்டுகளில் மழைவெள்ளம் பெருக்கெடுத்தது.

பேரூர் படித்துறை மழைநீரில் மூழ்கியது. வேடபட்டிகுளம், செல்வம்பதி, கோளரம்பதி, கிருஷ்ணம்பதி, செல்வசிந்தாமணி, உக்கடம் பெரியகுளத்திற்கு நீர் வரத்து இருந்தது.

கோவை நகரில் கனமழை பெய்ததால், தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. பாதாள சாக்கடை பணிகள், சாலை பணிகளுக்காக பல இடங்களில் தோண்டப்பட்ட குழி சரியாக மூடப்படாததாலும், மழைநீர் வடிகால்கள் அடைபட்டிருந்ததால், மழை நீர் வெளியேற வழியின்றி தேங்கி நின்றது.

கோவை அவிநாசி மேம்பாலம் லங்காகார்னர், சோமசுந்தராமில் சந்திப்பு பாலத்திற்கு கீழ் பகுதியில் இரண்டு அடி உயரத்துக்கு மழை நீர் தேங்கியது, ஆர்.எஸ்.புரம் பகுதியில் பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட குழி சரியாக மூடப்படாததால், டி.பி.சாலை தெற்கு பகுதி சேறும், சகதியுமாக காணப்பட்டது.

சாய்பாபா காலனி அண்ணா மார்க்கெட், மேட்டுப்பாளையம் சாலை எம்.ஜி.ஆர்., மார்க்கெட் சாலைகள் சகதிகளாக மாறியது. மேட்டுப்பாளையம் சாலையிலுள்ள மாநகராட்சி பேருந்து நிலையத்தில் மழைநீர் சூழ்ந்தது. நேற்று மாவட்டத்தில், 15 மி.மீ., அளவு மழை பெய்துள்ளது. அன்னூரில் 12, கோவை விமானநிலையம் 34.2, மேட்டுப்பாளையத்தில் 17, சூலூர் 38, வேளாண் பல்கலையில் 20 மி.மீ., மழை பதிவானது. நேற்று மாவட்டத்தில் சராசரி, 15 மி.மீ., மழை அளவிற்கு பதிவாகியுள்ளது.
 

Similar News