மீறப்படும் விதிமுறைகள், ஆபத்தில் உதகை - கண்டுகொள்ளுமா தமிழக அரசு?

Update: 2022-07-07 13:00 GMT

மலைகளின் அரசியான நீலகிரியில் 67 சதவீதம் வனப்பகுதி உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையின் மிக முக்கிய உயிர் சூழல் மண்டலமாக விளங்குதால் இயற்கை வளங்களை பாதுகாக்க வேண்டும் என்பதற்காக பிளாஸ்டிக் பயன்படுத்துவதற்கு தடை, கற்கள் உடைக்க, ஆழ்துளை கிணறு உள்ளிட்டவைகள் அமைப்பதற்கு தடை அமலில் உள்ளது.

மேலும், நிலச்சரிவு அதிகமாக ஏற்படும் சூழலால் பாறைகளை உடைக்கவும் மண்ணை வெட்டி எடுத்து அகற்றுவதற்கும் உயர்நீதிமன்றம் தடை விதித்தது. அதிலும் வீடு கட்டுவதற்கு மாவட்ட நிர்வாகம் அமைத்துள்ள கமிட்டியிடம் அனுமதி பெற வேண்டும். இதன் காரணமாக நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த சாதாரண மக்கள் வீடு கட்டுவதற்கு அனுமதி கேட்டு இன்றும் 2 ஆண்டுகளாக காத்திருக்கும் சூழலும் உள்ளது.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக ஊட்டியில் பல்வேறு பகுதிகளில் நீதிமன்ற உத்தவை மீறியும் வசதி படைத்தவர்கள் மலைகளை குடைந்து சாலை அமைப்பது, கட்டுமான பணிகளை செய்வது, ராட்சத பாறைகளை வெடிவைத்து உடைப்பது உள்ளிட்டவைகளில் ஈடுபடுகின்றனர்.

இதனால் சுற்றுச்சூழல் பாதிப்பு அடைந்துள்ளது. எனவே பாறைகளை வெடிவைத்து தகர்ப்பதால் மலை மாவட்டமான நீலகிரிக்கு மிகப்பெரிய ஆபத்து ஏற்படும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எச்சரிக்கை செய்துள்ளனர். மேலும், மலை வெடி வைத்து தகர்ப்பதை வருவாய்த்துறையினர் கண்டும் காணாமல் இருப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். எனவே உடனடியாக விதி மீறும் நபர்களை கைது செய்ய வேண்டும் என்று மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை வலுத்து வருகிறது.

Source, Image Courtesy: News 18 Tamilnadu

Tags:    

Similar News