ஓசூர் அருகே மின்சாரம் பாய்ந்து 4 தொழிலாளர்கள் உயிரிழப்பு.!

பந்தல் போடும் பணியில் 4 தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பந்தல் போடுவதற்காக இரும்பு கம்பியை தொழிலாளர்கள் 4 பேரும் தூக்கி சென்றனர்.

Update: 2021-04-08 11:36 GMT

அத்திப்பள்ளி அருகே அடுக்குமாடி கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜையையொட்டி பந்தல் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 4 தொழிலாளர்கள் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக, கர்நாடக மாநில எல்லையான ஓசூர் அருகேயுள்ள அத்திப்பள்ளி இண்டலப்பெலே கிராமத்தில் புதிதாக அடுக்குமாடி கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை இன்று நடைபெற இருந்தது. இதற்காக அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் கட்டப்படும் இடத்தில் சாமியான பந்தல் போட கட்டுமான நிறுவனம் முடிவு செய்தது. இதற்கான பந்தல் போடும் பணிகள் நேற்று மாலை நடந்தது.




 


பந்தல் போடும் பணியில் 4 தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பந்தல் போடுவதற்காக இரும்பு கம்பியை தொழிலாளர்கள் 4 பேரும் தூக்கி சென்றனர். அந்த வழியாக சென்ற உயர்மின் அழுத்த ஒயரில் கம்பி உரசியதாக தெரிகிறது. இதனால் இரும்பு கம்பி மூலமாக மின்சாரம் பாய்ந்ததில் 4 பேரின் உடலிலும் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டனர். இதில் சம்பவ இடத்திலேயே 4 தொழிலாளர்களும் உயிரிழந்தனர்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், இது குறித்து அத்திப்பள்ளி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் 4 பேரின் சடலங்களை கைப்பற்றி பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்கள் நான்கு பேரும் கர்நாடக மாநிலம், பெங்களூரு பரப்பன அக்ரஹார பகுதியை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News