பேரிடர் சூழலை தொலைநோக்குடன் கணித்து அன்றே பயிர்க்காப்பீட்டுத் திட்டத்தை பரவலாக்கிய பிரதமர் : களஆய்வில் மத்திய அமைச்சர் எல்.முருகன்!
தமிழகத்தில் மழைநீரை சேமிக்கும் தொலைநோக்கு திட்டம் 50 ஆண்டுகளாக இல்லாதது வேதனை
மழையால் பாதிக்கப்பட்டுள்ள அம்பத்தூர் தொழிற்பேட்டை, போரூர் மற்றும் தியாகராய நகர் உள்ளிட்ட பகுதிகளை மத்திய இணையமைச்சர் எல்.முருகன், பார்வையிட்டார். அப்போது மழையால் பாதிக்கப்பட்டுள்ள தமிழகத்துக்கு அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்கும் என உறுதியளித்துள்ளார்.
இதனை தொடர்ந்து, அம்பத்தூர் பட்டரவாக்கம் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தொழிற்பேட்டை பகுதியில் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். பின்னர் போரூர் மற்றும் தியாகராய நகரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினார்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழகத்துக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு நிச்சயம் வழங்கும் என்றார். பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்வரைத் தொடர்பு கொண்டு, வெள்ள நிவாரணப் பணிகளுக்குத் தேவையான உதவிகளை மத்திய அரசு செய்யும் என அண்மையில் வாக்குறுதி அளித்திருப்பதை சுட்டிக்காட்டிய அமைச்சர் முருகன், அந்த அடிப்படையில் தேவையான உதவிகளை மத்திய அரசு தற்போது செய்து கொண்டிருப்பதாக தெரிவித்தார்.
அண்மையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ,பிரதமர் நரேந்தி்ர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் திரு.அமித்ஷா ஆகியோரைச் சந்தித்து தமிழகத்துக்கு செய்த உதவிகளுக்கு நன்றி தெரிவித்திருந்தார் என்றும் அப்போது மேலும் தேவைப்படும் உதவிகளை தமிழகத்துக்குச் செய்ய மத்திய அரசு தயாராக உள்ளது என அவர்கள் உறுதியளித்துள்ளனர் என்றும் கூறினார்.
வெள்ளத்தால் நெற்பயிர்கள், கரும்பு, வாழை பயிர்கள் சேதமடைந்துள்ளதால், இதுவரை பயிர்க்காப்பீடு செய்யாத விவசாயிகள் உடனடியாக அதனை செய்துகொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். இயற்கை பேரிடரால் விவசாயிகள் சிறிதும் பாதிக்கப்படக் கூடாது என்பதை கருத்தில் கொண்டே, பிரதமர் நரேந்தி்ர மோடி ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் தமது கனவுத் திட்டமாக பயிர்க்காப்பீட்டுத் திட்டத்தை அறிமுகம் செய்தார் என அவர் குறிப்பிட்டார்.
அத்தகைய கனவுத் திட்டத்தை தற்போதைய வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட, பாதிக்கப்படாத விவசாயிகள் என அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் அது குறித்த அறிவிப்பு நாளிதழ்களில் கூட விளம்பரமாக வெளியிடப்பட்டுள்ளது எனவும் அமைச்சர் முருகன் குறிப்பிட்டார்.