தரமற்ற உணவு தரும் ஹக்கீம் பிரியாணி - புகார் தரக்கூடாது என மிரட்டும் 'முக்கிய' கட்சிப் பிரமுகர்.!
தரமற்ற உணவு தரும் ஹக்கீம் பிரியாணி - புகார் தரக்கூடாது என மிரட்டும் 'முக்கிய' கட்சிப் பிரமுகர்.!
குறிப்பிட்ட சில உணவகங்கள், குறிப்பாக பிரியாணிக் கடைகளில் சுகாதாரம் இல்லை, தரமான முறையில் உணவு தயாரிக்கப்படுவது இல்லை என்றும் ஆட்டிறைச்சிக்கு பதிலாக மாட்டிறைச்சி, இளம் கன்றின் இறைச்சியைப் பயன்படுத்துவதாகவும் அவ்வப்போது புகார்கள் வந்தன வண்ணம் உள்ளன. எனினும் மக்களின் பிரியாணி ஆசை அடங்குவது போல் இல்லை. இதனால் தெருவுக்கு ஒரு பிரியாணிக் கடை என்று ஆகி விட்டது தமிழகத்தின் நிலை.
சிறிய, ரோட்டோரக் கடைகள் மட்டும் அல்ல, பெரிய ரெஸ்டாரண்ட் அளவிலான உணவகங்கள் கூட உணவு தயாரிப்பில் அக்கறை காட்டுவதில்லை என்பதை நிரூபிக்கும் விதமாக நடந்திருக்கிறது ஒரு சம்பவம்.
திருச்சி பா.ம.க மாவட்டச் செயலாளராக இருப்பவர் திலீப் குமார். இவர் கடந்த திங்கள் அன்று தனது குடும்பத்துடன் தீபாவளி ஷாப்பிங் சென்று விட்டு வீடு திரும்பும் முன் பிரியாணி சாப்பிடலாம் என்று அவரது மகளின் ஆசைக்கு இணங்க ஒரு பிரபலமான உணவகத்துக்குச் சென்றிருக்கிறார்.
திருச்சி சின்னக்கடை வீதியில் வாலாஜா காம்ப்ளெக்சில் உள்ள கே.எம்.எஸ் ஹக்கீம் பிரியாணி கடை தான் அது. அங்கே பிரியாணியும் சிக்கன் லாலிபாப்பும் ஆர்டர் செய்து விட்டு ஆவலாக சாப்பிடலாம் என்று காத்திருந்தவர்களுக்கு கிடைத்ததோ அதிர்ச்சி வைத்தியம்.
சப்ளையர் கொண்டு வந்து வைத்த மட்டன் பிரியாணியில் இருந்த ஆட்டுக்கறி சரியாக சுத்தம் செய்யப்படாமல் ரோமங்களுடன் அப்படியே போட்டு சமைக்கப்பட்டு இருந்தது. இதைப் பார்த்து அருவருப்படைந்த திலீப் குமார் சப்ளையரை அழைத்து கேள்வி எழுப்பியதுடன் உணவக மேலாளரிடமும் புகார் தெரிவித்துள்ளார்.
ஆனால் அவரது புகாரைக் கண்டு கொள்ளாமல் தொடர்ந்து அதே பிரியாணியை அனைவருக்கும் பரிமாறி இருக்கின்றனர். அப்போது அங்கு 40க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது. "இவ்வளவு சொல்லியும் நீங்கள் அக்கறையின்றி உங்கள் வேலையைப் பார்த்துக் கொண்டு இருந்தால் என்ன அர்த்தம்" என்று கேட்ட திலீப் குமாருக்கு மேலாளர் செவி சாய்க்கவில்லை.