“அவர்களை விடுங்க - தி.மு.க; அவர்களை விடாதீங்க - காங்கிரஸ்” - ஏழுவர் விடுதலையில் உச்சக்கட்ட கூட்டணி குழப்பம்!

“அவர்களை விடுங்க - தி.மு.க; அவர்களை விடாதீங்க - காங்கிரஸ்” - ஏழுவர் விடுதலையில் உச்சக்கட்ட கூட்டணி குழப்பம்!

Update: 2020-11-07 14:45 GMT
முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலையில் பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி உள்ளிட்ட ஏழுவர் விடுதலையை அவர்கள் குடும்பம் எதிர்பார்த்துக் கொண்டு இருக்கும் வேளையில், அது சாத்தியமில்லை என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார். மேலும் ஏழுவர் விடுதலையை வேண்டும் என கூறி வரும் தி.மு.க-வோ தன் கூட்டணி கட்சியான காங்கிரஸ் இதுபோல் வேண்டாம் என கூறியதற்கு என்ன செய்வதென்று தெரியாமல் திக்கற்று நிற்கிறது. 

இது தொடர்பாக இன்று அறிக்கையளித்துள்ள தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தனது ட்விட்டர் பதிவில் கூறியதாவது.

"முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலையாளிகளை விடுதலை செய்வதை நீதிமன்றம் தான் முடிவு செய்ய வேண்டும். அவர்களை விடுவித்தால் சிறைச் சாலைகளில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கும் அனைத்து தமிழ் கொலை குற்றவாளிகளையும் விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழும். 

7 பேர் விடுதலையை நீதிமன்றம் அறிவித்தால் ஏற்றுக் கொள்வோம். ஆனால், அரசியல் கட்சியினர் அவர்களுக்கு விடுதலை கோருவது ஏற்புடையது அல்ல. கொலை குற்றம் செய்தவர்களை குற்றவாளிகள் என்றுதான் கருத வேண்டுமே தவிர, அவர்களை தமிழர்கள் என்று அழைப்பது சரியல்ல.

பெருமதிப்பிற்குரிய அப்துல் கலாம், பெருந்தலைவர் காமராஜர், பேரறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, தோழர் ஜீவானந்தம், கணிதமேதை ராமானுஜம் போன்றவர்களை தமிழர்கள் என்று அழைப்பது பெருமைக்குரியது.

கொலை குற்றவாளிகளை விடுவிக்க வேண்டும் என்று ஒரு இயக்கம் ஆரம்பித்தால் தமிழகத்தில் காவல் நிலையங்கள் வேண்டாம், நீதிமன்றங்கள் வேண்டாம், சட்டம் ஒழுங்கைப் பற்றி பேச வேண்டாம் என்பது பொருளாகும்.

எனவே, முன்னாள் பிரதமரை படுகொலை செய்து, இந்தியாவிற்கு கேடு விளைவித்த  குற்றவாளிகளுக்கு பரிந்து பேசுவது தமிழர் பண்பாடு ஆகாது" என்று அறிக்கையளித்துள்ளார்.


அவர்களை விடுங்க என தி.மு.க-வும், அவர்களை விடாதீங்க என காங்கிரஸும் கூறி ஏழுவர் விடுதலையில் உச்சக்கட்ட கூட்டணி குழப்பம் ஏற்படுத்தியுள்ளனர்.

Similar News