முழு ஊரடங்கு: தேவையின்றி வெளியில் சுற்றினால் வழக்குப்பதிவு, வாகனங்கள் பறிமுதல்.. போலீஸ் எச்சரிக்கை.!
வாகனங்களும் பறிமுதல் செய்யப்படும் என்று போலீஸ் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக இன்று (ஏப்ரல் 25) ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் வாகனங்கள் பரபரப்பாக செல்லும் சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்படுகிறது. அதே சமயம் ஊரடங்கை மீறி மக்கள் வெளியில் சுற்றினால் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, வாகனங்களும் பறிமுதல் செய்யப்படும் என்று போலீஸ் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னை மாநகரப் போக்குவரத்து காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. காய்கறி கொண்டு செல்லும் வாகனங்கள், உணவகங்களில் இருந்து வீடுகளுக்கு பார்சல் கொண்டு செல்லும் வாகனங்கள், திருமணம் மற்றும் இறுதிச் சடங்கு தொடர்பான வாகனங்கள் உள்ளிட்டவை அவர்களுக்கு என்று அனுமதிக்கப்பட்ட நேரத்தில் மட்டும் இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஊரடங்கை மீறி வரும் வாகனங்கள் மீது குற்றவியல் நடைமுறைச் சட்டம் 144ன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் எனவும் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.