தடை செய்யப்பட்ட ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் தொடர்பு? ஈரோடு நபருக்கு ஜாமீன் மறுப்பு!
ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்பு வைத்திருந்ததாக ஈரோட்டைச் சேர்ந்த ஆசிப் முஸ்தகீன் என்பவரை, கடந்த ஜூலை 26-ம் தேதி போலீசார் கைது செய்தனர்.
அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட மொபைல் போனில் இருந்து அவர், அரபி மொழியில் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பை சேர்ந்தவர்களுடன் நடத்திய உரையாடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டம் உள்ளிட்ட சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஜாமீன் கோரி ஆசிப் முஸ்தகீன் தாக்கல் செய்த மனுவை, ஈரோடு முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்த உத்தரவை எதிர்த்து முஸ்தகீன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
மனுதாரர் கைது செய்யப்பட்டு ஒப்புதல் வாக்குமூலம் பெறப்பட்ட பிறகே பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதால், அவை குறித்து கைது தகவலில் குறிப்பிடவில்லை என்ற வாதத்தை ஏற்க முடியாது எனவும், வழக்கின் புலன் விசாரணை ஆரம்பகட்டத்தில் உள்ளதால் தற்போதைய நிலையில் ஜாமீன் வழங்க முடியாது எனவும் கூறி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
Input From: Puthiya Thalaimurai