வருமானவரி ஏய்ப்பு வழக்கு - விடுவிக்க கோரி எம்.பி.கார்த்தி சிதம்பரம், ஸ்ரீநிதி மன்றாடல்.!

வருமானவரி ஏய்ப்பு வழக்கு - விடுவிக்க கோரி எம்.பி.கார்த்தி சிதம்பரம், ஸ்ரீநிதி மன்றாடல்.!

Update: 2020-11-07 10:38 GMT

வருமானவரி ஏய்ப்பு தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி, காங்கிரஸ் எம்.பி.கார்த்தி சிதம்பரம் மற்றும் அவரது மனைவி ஸ்ரீநிதி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை, சென்னை உயர்நீதிமன்றம் நவம்பர் 10- ஆம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளது.

காங்கிரஸின் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகனும், எம்.பி'யுமான கார்த்தி சிதம்பரம், கடந்த 2015- ஆம் ஆண்டு முட்டுக்காடு பகுதியில் உள்ள தங்களுக்குச் சொந்தமான சொத்துகளை விற்பனை செய்ததன் மூலம் கிடைத்த 7 கோடியே 37 லட்சம் ரூபாய் வருமானத்தை கணக்கு காட்டாமல் மறைத்த வழக்கில் கார்த்தி சிதம்பரம் மற்றும் ஸ்ரீநிதி ஆகியோருக்கு எதிராக வருமான வரித்துறை கடந்த 2018- ஆம் ஆண்டு வழக்குத் தொடர்ந்தது. 

இந்த வழக்கில் இருந்து தங்களை விடுவிக்க கோரி,  கார்த்தி சிதம்பரமும், ஸ்ரீநிதியும் தாக்கல் செய்த மனுக்கள், நீதிபதி சதீஷ்குமார் முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது கார்த்தி சிதம்பரம் தரப்பில் வாதாடிய வழக்கறிஞர் கபில்சிபல், ‘வருமான வரித்துறை நடைமுறைகள் எதையும் முறையாகப் பின்பற்றவில்லை. வரி ஏய்ப்பு, வருமானம் கணக்கு காட்டவில்லை என குற்றம் சாட்டும் வருமான வரித்துறை, அந்த ஆண்டுக்கான வருமானவரி கணக்கு தொடர்பாக, எந்த உத்தரவும் பிறப்பிக்காமல் நிலுவையில் வைத்துள்ளது. மேலும்,  கணக்கு தாக்கலில் ஏதேனும் தவறுகள் இருந்தால், அந்த அதிகாரி தான் வழக்கு தொடர வேண்டும். எனவே, வருமான வரித்துறை துணை இயக்குனர் தாக்கல் செய்த வழக்கைத் தள்ளுபடி செய்ய வேண்டும்.’ என வாதிட்டார்.

இந்த வாதங்களை கேட்ட நீதிபதி, விசாரணையை வரும் நவம்பர் 10- ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

Similar News