டாக்டர், நர்சுக்கு சிறப்பு ஊதியம் அளிக்க வேண்டும்.. தமிழக அரசுக்கு ராமதாஸ் வேண்டுகோள்.!

கொரோனா காலத்தில் தங்களது உயிர்களை பற்றி கவலைப்படாமல் பணியாற்றி வருபவர்கள் மருத்துவர், செவிலியர்கள். அவர்களுக்கு அரசு சிறப்பு ஊதியம் அளிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Update: 2021-05-11 12:00 GMT

கொரோனா காலத்தில் தங்களது உயிர்களை பற்றி கவலைப்படாமல் பணியாற்றி வருபவர்கள் மருத்துவர், செவிலியர்கள். அவர்களுக்கு அரசு சிறப்பு ஊதியம் அளிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது:


 



தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பரவலுக்கு எதிரான போரில் அர்ப்பணிப்பு உணர்வுடன் தங்களை ஈடுபடுத்திக் கொண்டிருக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட மருத்துவத்துறை முன்களப் பணியாளர்கள் உயிரிழப்பதாக வெளியாகி வரும் செய்திகள்அதிர்ச்சியளிக்கின்றன.

மருத்துவத்துறை பணியாளர்களின் தியாகம் அளவிட முடியாதது. அவர்கள் அனைவருக்கும் எமது வீர வணக்கங்கள். கொரோனா வைரஸ் பரவல் வேகம் அதிகரித்துள்ள நிலையில் தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் உள்ள அனைத்து படுக்கைகளும் நோயாளிகளால் நிரம்பி வழிகின்றன.

கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவல் உச்சத்தில் இருந்த போது தமிழ்நாடு முழுவதும் அரசு மருத்துவமனைகளிலும், வீட்டுத் தனிமையிலும் இருந்தவர்களின் அதிகபட்ச எண்ணிக்கை 54,896 மட்டும் தான். ஆனால், இன்றைய நிலவரப்படி இந்த எண்ணிக்கை 1.52 லட்சத்தைக் கடந்து விட்டது. இவர்களில் பெரும்பான்மையினர் அரசு மருத்துவமனைகளிலும், அரசு கோவிட் மையங்களிலும் தான் மருத்துவம் பெற்று வருகின்றனர்.


 



கொரோனாவுக்காக மருத்துவம் தேவைப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை மூன்று மடங்குக்கும் கூடுதலாக அதிகரித்து விட்ட நிலையில், அவர்களுக்கு மருத்துவம் அளிக்க கூடுதலாக மருத்துவர்கள் நியமிக்கப்படவில்லை.

இருக்கும் மருத்துவர்கள் தான் அனைவருக்கும் மருத்துவம் அளிக்க வேண்டி உள்ளது. அதனால் அவர்களின் பணிச்சுமை அதிகரித்துள்ளது. அதுமட்டுமின்றி, பல நாட்களில் பணி நேரத்தை விட கூடுதலாக மருத்துவர்களும், செவிலியர்களும் பணியாற்ற வேண்டியிருக்கிறது.

கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் தொற்றின் முதல் அலை பரவியபோது இரு வாரம் பணியாற்றிய மருத்துவர்களுக்கு ஒரு வாரம் ஓய்வு அளிக்கப்பட்டது. ஆனால், இந்த ஆண்டு அத்தகைய ஓய்வு அளிக்கப்படவில்லை. அதுமட்டுமின்றி, கடந்த முறை மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட அனைத்து மருத்துவப் பணியாளர்களுக்கும் ஒரு மாத ஊதியம் சிறப்பு ஊதியமாக வழங்கப்பட்டது. ஆனால், இந்த முறை அத்தகைய சிறப்பு ஊதியம் வழங்கப்படாமல், பணிச்சுமையும் அதிகரிக்கப்பட்டிருக்கிறது.




 


மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட மருத்துவப் பணியாளர்களின் தியாக உணர்வுடன் கூடிய அர்ப்பணிப்பான சேவைக்கு அரசு அங்கீகாரம் அளிக்க வேண்டும். அதற்காக கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தி முடிக்கும் வரை, உயிரைப் பணயம் வைத்து பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், பிற மருத்துவப் பணியாளர்களுக்கு இரட்டிப்பு ஊதியம் வழங்க வேண்டும்.

பணியின் போது உயிர்த்தியாகம் செய்த மருத்துவப் பணியாளர்களுக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ரூ.50 லட்சம் நிதியுதவியை தாமதமின்றி அவர்களின் குடும்பங்களுக்கு வழங்க வேண்டும். இவை அனைத்தையும் விட, மருத்துவத்துறையினரின் பணிச்சுமையை குறைக்கும் வகையில் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பிற மருத்துவப் பணியாளர்களை போதிய எண்ணிக்கையில் நியமிக்க அரசு முன்வர வேண்டும். இவ்வாறு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Similar News