கோயில் ஜல்லிக்கட்டு காளை உயிரிழப்பு: கண்ணீர் அஞ்சலி போஸ்டருடன் இறுதிச்சடங்கு!

Update: 2022-05-21 13:45 GMT

மதுரையில் உயிரிழந்த ஜல்லிக்கட்டு காளைக்கு மனிதர்களைப் போன்று இறுதிச்சடங்கு செய்து அடக்கம் செய்துள்ள சம்பவம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. மதுரை பெரியார் பேருந்து நிலையம், திடீர்நகர் பகுதியில் தேவி ஸ்ரீ கருமாரியம்மன் கோயிலுக்காக அப்பகுதியினர் ஜல்லிக்கட்டு காளை வாங்கி வளர்த்து வந்தனர். அந்த காளைக்கு மருது என்று பெயர் வைத்து பாசத்துடன் கண்காணித்து வந்தனர்.

இதற்கு மத்தியில் ஆண்டுதோறும் நடைபெறும் அவனியாபுரம், அலங்காநல்லூர், பாலமேடு, கரடிக்கல், மற்றும் தேனி மாவட்டம் பல்லவராயன் பட்டி உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்று பரிசுகளையும் பெற்றுள்ளது. கோயில் காளை என்பதால் அனைத்து மக்களும் மரியாதை அளித்து வருவர்.

இந்நிலையில், திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டு காளை மருது நேற்று (மே 20) உயிரிழந்தது. இது குறித்து தகவல் கிடைத்த பொதுமக்கள் கோயில் காளைக்கு பால், இளநீர், மஞ்சள் உள்ளிட்டவைகளால் அபிஷேகம் செய்து பொட்டு வைத்து மாலை அணிவித்து மரியாதை செய்தனர். மேலும், மனிதர்களுக்கு நடத்தப்படுவதை போன்று காளைக்கும் இறுதிச்சடங்கு நடத்த முடிவு செய்தனர்.

அதன்படி காளைக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அச்சடித்து அனைத்து இடங்களிலும் ஒட்டினர். இதனை பார்த்து பலர் நேரில் சென்று கோயில் காளைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதன்பின்னர் அனைத்து மரியாதையும் செய்த பின்னர் அடக்கம் செய்தனர். பலர் காளை உயிரிழந்ததை நினைத்து கண்ணீர் விட்டதையும் காணமுடிகிறது.

Source, Image Courtesy: Puthiyathalaimurai

Tags:    

Similar News