ரஜினிகாந்துடன் இன்று சந்திக்கும் நிலையில், கோவை மன்றத்தினர் இயற்றிய தீர்மானத்தால் பரபரப்பு.!

ரஜினிகாந்துடன் இன்று சந்திக்கும் நிலையில், கோவை மன்றத்தினர் இயற்றிய தீர்மானத்தால் பரபரப்பு.!

Update: 2020-11-30 09:54 GMT

கடந்த பல மாதங்களாக ரஜினிகாந்த் அவர்களிடமிருந்து எந்த வித அறிவிப்பும் வரவில்லை. இடையே மன்ற நிர்வாகிகளுடனான சந்திப்பும் நிகழவில்லை என்பதால் தமிழகமெங்கும் உள்ள அவருடைய ரசிகர்கள் மட்டுமல்லாது அவருடைய அரசியல் குறித்த அறிவிப்புக்காக ஆர்வத்துடன் காத்திருப்பவர்களுக்கும் மனதில் வருத்தம் ஏற்படத் தொடங்கியது. 

இடையில் யாரோ அவரது உடல்நிலை பற்றி சமூக ஊடகங்களில் வதந்திகள் பரப்பினர். அதற்கு ரஜினிகாந்த் சொன்ன பதில் மேலும் குழப்பத்தை ஏற்படுத்தியது. இது அவரது வருகை குறித்த சந்தேகத்தை மேலும் தூண்டியது.

இந்நிலையில், நாடு முழுவதும் கரோனா வைரஸ் பரவல் இருந்ததால்தான் ரஜினிகாந்த் அவர்களது அரசியல் செயல்பாடுகளில் தொய்வு இருந்தது. மதுரை, காஞ்சிபுரம், விழுப்புரம் உள்ளிட்ட சில இடங்களில் பொதுக்கூட்டம் நடத்த தயாராகி வந்த நேரத்தில் கரோனா வைரஸ் காரணமாகவே தலைவர் அந்த திட்டத்தை கைவிட்டார் என  சில மாவட்ட நிர்வாகிகள் வெளிப்படையாக கருத்துகளை சமூக ஊடகங்களில் பதிவு செய்து வந்தனர்.

இந்நிலையில் இன்று சென்னை ராகவேந்திரா திருமண மண்டபத்தில் மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்துக்கு அவர் ஏற்பாடு செய்துள்ளதாகவும், இந்த கூட்டத்தில் ரஜினிமக்கள் மன்ற மாவட்டச் செயலாளர்களை சந்திக்கிறார் எனவும் அதிகார பூர்வ தகவல்கள் வெளி வந்துள்ளன. 

இந்த சந்திப்பில் தனது அரசியல் நுழைவு, நிலைப்பாடு பற்றிய தனது முடிவுகள் குறித்து ஆலோசிக்க உள்ளதாக தெரிகிறது. அரசியல் நிலைப்பாடு குறித்து முக்கிய முடிவுகளை அவர் வெளியிட உள்ளார் என்றும் கூறப்படுகிறது. அதே சமயம் வருகிற டிசம்பர் 12- ந்தேதி ரஜினிகாந்த்தின் பிறந்த நாளும் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அது குறித்தும் பேசப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் நேற்று கோவையில் ரஜினிகாந்த் மக்கள் மன்ற நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் திங்களன்று ரஜினிகாந்த் அரசியல் கட்சியை தொடங்கும் அறிவிப்பை வெளியிடுவார் என உற்சாகமாக ஒரு அட்வான்ஸ் தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Similar News