கோவையில் பட்டா கத்தியுடன் வீடுகளில் ரகளை செய்யும் ரவுடி: அச்சத்தில் பொதுமக்கள்.!
கோவையில் ரவுடி ஒருவர் குடிபோதையில் பட்டா கத்தியுடன் குடியிருப்பு பகுதிகளில் ரகளை செய்யும் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவையில் ரவுடி ஒருவர் குடிபோதையில் பட்டா கத்தியுடன் குடியிருப்பு பகுதிகளில் ரகளை செய்யும் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை, சிங்காநல்லூர் அருகே உள்ள மசகாளிபாளையம் முல்லை நகர் பகுதியில் வசித்து வருபவர் மணிகண்டன். இவர் பிரபல ரவுடி என்று கூறப்படுகிறது. மணிகண்டன் அடிக்கடி குடியிருப்பு பகுதிகளில் குடிபோதையில் பட்டா கத்தியுடன் தகராறு செய்து வருவதாகவும், அங்கிருக்கும் வாகனங்களை அடித்து நொறுக்கி வருவதாக கூறப்படுகிறது. ரவுடியின் செயலால் குடியிருப்பு வாசிகள் மிகவும் பயத்திலேயே வாழ்ந்து வந்துள்ளனர்.
ஒரு கட்டத்தில் ரவுடியின் அட்டகாசம் அதிகரிக்கவே, அவரை தட்டிக்கேட்ட பொதுமக்கள் முடிவு செய்துள்ளனர். அப்போது ரவுடி மணிகண்டன் வீட்டுக்கு எதிரே உள்ளவர்கள் தட்டி கேட்டுள்ளனர். அப்போது தட்டிக்கேட்டவர்கள் மீது கற்களை எடுத்து வீசியும் பயமுறுத்தியுள்ளார். இதனால் பயந்துபோனவர்கள் வீடுகளுக்கு உள்ளே சென்றுள்ளனர்.
இதனையடுத்து அங்கிருந்த இளைஞர் ஒருவர் போலீசுக்கு தகவல் அளிப்பதாக எச்சரிக்கை செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ரவுடி தனது பட்டாக் கத்தியை எடுத்து அந்த இளைஞரின் வீட்டிற்கே சென்று தாக்க முயன்றுள்ளார்.
அது மட்டுமின்றி இளைஞரின் வீட்டின் கேட்டை ஏறி குதிக்க முயன்றுள்ளார். அப்போது அங்கிருந்தவர்கள் எச்சரிக்கை செய்ததால், கேட்டின் மீது ஏறியதை கைவிட்டு ரவுடி மணிகண்டன் சென்றுள்ளார்.
இது பற்றிய தகவல் அறிந்த சிங்காநல்லூர் போலீசார் ரவுடி மணிகண்டனை பிடித்து விசாரணை நடத்தியதில், அவருக்கு சற்று மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனை தொடர்ந்து அவரை மனநலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.