சீனாவுடன் போட்டிபோடும் மித்ரா திட்டம்: மத்திய அரசு கொண்டு வந்ததை தமிழக அரசு பயன்படுத்த ஜவுளி உற்பத்தியாளர்கள் வேண்டுகோள்!

மத்திய அரசு கொண்டு வந்த மித்ரா திட்டத்திற்கு தமிழக ஜவுளித்துறையினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இந்த அரிய வாய்ப்பை தமிழக அரசு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று ஜவுளி உற்பத்தியாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Update: 2021-10-09 01:42 GMT

மத்திய அரசு கொண்டு வந்த மித்ரா திட்டத்திற்கு தமிழக ஜவுளித்துறையினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இந்த அரிய வாய்ப்பை தமிழக அரசு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று ஜவுளி உற்பத்தியாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இந்திய அளவிலும், தமிழக அளவிலும் அதிகமான வேலை வாய்ப்பை வழங்கும் துறையாக விளங்கி வருவது ஜவுளித்துறை மட்டுமே. தமிழகத்தில் மட்டும் 1,200 நூற்பாலைகள், ஆடை உற்பத்தி ஆலைகள் 500 உட்பட ஒட்டுமொத்தமாக 3 ஆயிரம் ஆலைகள் இயங்கி வருகிறது. இதில் 80 சதவீதம் வரை கோவை, திருப்பூர், கரூர், ஈரோடு, நாமக்கல் ஆகிய கொங்கு மண்டலங்களில் உள்ளது.

இந்த மாவட்டங்களில் மட்டும் 40 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு ஜவுளிப் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதனை மேற்படுத்த மத்திய அரசு அறிவித்துள்ள மித்ரா திட்டம் என்பது சீனாவுடன் போட்டிபோடுவதற்கு உதவும் என்று உற்பத்தியாளர்களின் நம்பிக்கையாக உள்ளது.

அதன்படி 4,445 கோடி ரூபாய் முதலீட்டில் 7 மெகா ஜவுளிப்பூங்காக்கள் தொடங்கப்படும் என்று மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பால் அதிகமான வளர்ச்சியை எட்ட உதவும் என்றும் மேற்கு மண்டல ஜவுளித்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் மித்ரா திட்டத்திற்கு ஆயிரம் ஏக்கர் நிலத்தை கையப்படுத்தி தயார் நிலையில் இருப்பதாக அறிக்கை சமர்ப்பிக்கும் மாநிலத்திற்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த வாய்ப்பை தமிழக அரசு உடனடியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று ஒட்டுமொத்த நூல் மற்றும் ஜவுளி உற்பத்தியாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Source: Puthiyathalamurai

Image Courtesy:Looms.Co


Tags:    

Similar News