இடைவிடாத பெய்த மழை-.. மீண்டும் வெள்ளக்காடான சென்னை மாநகரம்
இடைவிடாத பெய்த மழை-.. மீண்டும் வெள்ளக்காடான சென்னை மாநகரம்
முதலில் ஏற்பட்ட நிவர் புயல் காரணமாக கடந்த மாதம் 25, 26, 27 ஆகிய 3 நாட்கள் சென்னையில் கனமழை கொட்டித்தீர்த்தது. இதனிடையே சென்னை மாநகரம், புறநகர் பகுதிகளில் தொடர்ச்சியாக பெய்த மழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் குளம் போல் தேங்கியுள்ளது.
சென்னையின் முக்கிய சாலைகளான அண்ணா சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, கோயம்பேடு 100 அடி ரோடு, தாம்பரம் ஜி.எஸ்.டி. சாலை உள்ளிட்ட சாலைகள் வெள்ளத்தில் தத்தளிக்கிறது.
புறநகர் பகுதிகளிலும் மழை வெளுத்து வாங்கியது. இதனால் தாம்பரம், முடிச்சூர், பள்ளிக்கரணை, வேளச்சேரி, புழல், செங்குன்றம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனை தொடர்ந்து அங்கு வசித்து வந்த மக்கள் பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.
இந்த பாதிப்பில் இருந்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வசித்து வரும் பொதுமக்கள் ஓரளவு இயல்பு நிலைக்கு திரும்பி இருந்தனர். தாழ்வான பகுதிகளில் தேங்கிய தண்ணீரும் வடிய தொடங்கின.
இந்நிலையில், வங்க கடலில் உருவான புரெவி புயலால் சென்னையில் மீண்டும் கனமழை பெய்து வருகிறது. கடந்த 2 நாட்களாக விட்டு விட்டு பெய்து வந்த மழை நேற்று இரவு முதல் பலத்த மழையாக பெய்தது. இன்று அதிகாலை முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
நிவர் புயலின்போது பெய்த மழைபோல புரெவி புயல் காரணமாகவும் சென்னையில் மழை பெய்து கொண்டிருப்பதால் தாழ்வான பகுதிகளில் மீண்டும் வெள்ளம் தேங்கியுள்ளது. இதனால் சென்னை நகரம் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.