தமிழகம் கேட்டதை விடவே அதிகம் கொடுத்த மத்திய அரசு - மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் 6,255 கோடி ரூபாய் விடுவிப்பு!
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு நடப்பாண்டில் 6255 கோடி ரூபாய் விடுவிப்பு
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் மத்திய அரசு தமிழக அரசுக்கு நடப்பு நிதியாண்டில் 6255 கோடி ரூபாய் வழங்கியிருப்பதாக மத்திய இணையமைச்சர் டாக்டர் எல்.முருகன் தெரிவித்திருக்கிறார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இத்திட்டத்தில் 1178 கோடி ரூபாய் நிலுவைத் தொகையை மத்திய அரசு விடுவிக்க வேண்டுமென்று கோரி தமிழக முதலமைச்சர் பிரதமருக்கு எழுதிய கடிதத்தை குறை கூறினார். தமிழக அரசு கோரிய தொகையை விட அதிகமாக, இத்திட்டத்தின் கீழ் மத்திய அரசு நவம்பர்2அன்று 1361 கோடி ரூபாய் விடுவித்திருப்பதாக அவர் தெரிவித்தார்.
இத்திட்டம் செம்மையாகவும், வெளிப்படையாகவும் செயல்படுத்தப்பட வேண்டுமென்று முனைப்புடன் குறைத் தீர்க்கும் அமைப்பு, சுயேச்சையான, சமூக தணிக்கை உட்பட நிபந்தனைகளை விதித்துள்ளதாகவும், ஆனால் இதனை தமிழக அரசு பின்பற்றவில்லையென்றும் அவர் குற்றம் சாட்டினார்.
தமிழகத்தில் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் சுமார் 246 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடைபெற்றிருப்பதாகவும் கூறிய அமைச்சர், இதில் இதுவரை வெறும் 1 கோடியே 85 லட்சம் வரை மட்டுமே மீட்கப்பட்டுள்ளது என்றும் கூறினார்.
இந்தத் திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு 2500 லட்சம் மனித வேலை நாட்கள் ஒதுக்கப்பட்ட போதிலும், தமிழக அரசு 2190 லட்சம் மனித வேலை நாட்கள் மட்டுமே பயன்படுத்தியிருப்பதாக அவர் தெரிவித்தார்.
இந்தத் திட்டத்திற்கான நிலுவைத் தொகை இருப்பதாகவும், அதனை மத்திய அரசு விடுவிக்க வேண்டுமென்று தமிழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், மத்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சரை சந்தித்து கோரிக்கை விடுத்ததாகவும். ஒரு வாரத்திற்குள்ளாக அந்த தொகை விடுவிக்கப்படும் என்று மத்திய அமைச்சர் உறுதி அளித்ததாகவும் அவர் கூறினார்.