மாஸ்க் அணியாதவர்களிடம் ரூ.5,000 அபராதம்: கொரோனா கட்டுப்படுத்த ராமதாஸ் யோசனை.!
பொது இடங்களில் கொரோனா பாதுகாப்பு விதிகளைக் கடைப்பிடிக்க வேண்டியதன் அவசியம் குறித்துத் தமிழக மக்களுக்கு அரசு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
இந்தியாவில் தற்போது 2வது கொரோனா தொற்று அதிகமாக பரவி வருகிறது. இதனால் அனைவரும் இரண்டு மடங்கு எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்பதையே இது காட்டுகிறது. இதனிடையே பொது இடங்களில் முகக்கவசம் அணியாதது, பாதுகாப்பு அம்சங்களைக் காரணம் என்கிற உண்மையைப் பொதுமக்கள் புரிந்துகொண்டு செயல்பட வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் தினசரி கரோனா வைரஸ் பரவலின் எண்ணிக்கை, எவரும் நினைத்துப் பார்த்திராத வகையில் 3,645 ஆக உயர்ந்திருக்கிறது. கொரோனா பரவலின் வேகம் பல மடங்கு அதிகரித்திருக்கும் நிலையில், அதைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அரசு தீவிரப்படுத்த வேண்டியதும், அத்தகைய நடவடிக்கைகளுக்குத் தமிழக மக்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டியதும் அவசியமாகும்.
தமிழ்நாட்டில் மார்ச் மாதத் தொடக்கத்தில் தினசரி கொரோனா தொற்றுகளின் எண்ணிக்கை 450 என்ற அளவுக்குக் குறைந்திருந்தது. அதனால் ஏப்ரல் மாதத்தில் கொரோனாவின் பிடியிலிருந்து தமிழ்நாடு விடுதலையாகிவிடும் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்த நேரத்தில்தான் கொரோனா பரவல் வேகம் பல மடங்கு அதிகரித்துள்ளது. கடந்த மார்ச் 6ஆம் தேதி தினசரி கொரோனா பரவல் 562 மட்டும்தான். ஆனால், கடந்த ஒரு மாதத்தில் இந்த அளவு 648% அதிகரித்திருக்கிறது.
கடந்த ஆண்டு தினசரி கொரோனா பரவல் 562லிருந்து 3,645 ஆக அதிகரிக்க 56 நாட்கள் ஆயின. ஆனால், இப்போது 30 நாட்களில் இந்த அளவுக்கு அதிகரித்திருக்கிறது. இரண்டாவது அலையில் கொரோனா பரவல் வேகம் இரு மடங்கு அதிகரித்திருக்கிறது. அனைவரும் இரு மடங்கு எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்பதையே இது காட்டுகிறது. இந்த உண்மையைப் பொதுமக்கள் புரிந்துகொண்டு செயல்பட வேண்டும்.
கொரோனா பரவல் கட்டுப்பாடுகள் பெருமளவில் தளர்த்தப்பட்ட நிலையில் பொதுமக்கள் குறைந்தபட்ச பாதுகாப்பு விதிகளைக் கூட கடைப்பிடிக்காததுதான் இந்த அளவுக்கு நிலைமை மோசமானதற்குக் காரணம் ஆகும். திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகள், பொதுமக்கள் அதிகம் கூடும் திரையரங்குகள், வணிக வளாகங்கள், பேருந்துகள் மற்றும் தொடர்வண்டிகளில் பயணம் செய்பவர்கள் உள்ளிட்ட எவரும் முகக் கவசம் அணியாததுதான் கரோனா பரவல் வேகம் அதிகரித்ததற்குக் காரணம் ஆகும். சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரங்களும் கொரோனா பரவலுக்குக் காரணமாக அமைந்ததை எவராலும் மறுக்க முடியாது.