நூறு நாள் வேலைத்திட்டத்தில் 55 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் பணி.. வைகோ கோரிக்கை.!

நூறு நாள் வேலைத்திட்டத்தில் பலர் தங்களது வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். இதனிடையே கொரோனா தொற்றால் 55 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வேலை இல்லை என்று அரசு கூறியது. இதனால் பல லட்சம் பேர் வேலை இழந்துள்ளனர்.

Update: 2021-06-15 06:47 GMT

நூறு நாள் வேலைத்திட்டத்தில் பலர் தங்களது வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். இதனிடையே கொரோனா தொற்றால் 55 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வேலை இல்லை என்று அரசு கூறியது. இதனால் பல லட்சம் பேர் வேலை இழந்துள்ளனர்.




 


எனவே 55 வயதுக்கு மேற்பட்டோர்களுக்கும் உடனடியாக வேலை வழங்க வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார். இது பற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின்கீழ் கிராம புறங்களில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன.

கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலையால் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ள, இந்தச் சூழலில், அதனைக் கட்டுப்படுத்துவதற்கு ஊரடங்கை அமல்படுத்தி பல்வேறு வகையிலான கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்துள்ளது.


 



அதே போன்று நூறு நாள் வேலைத்திட்டத்தில் பணியாற்றும் ஊழியர்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகளை, கடந்த ஏப்ரல் 20ம் தேதி தமிழக அரசின் ஊரக மேம்பாடு மற்றும் ஊராட்சித்துறை ஆணையர் கே.எஸ்.பழனிச்சாமி வெளியிட்டார். அதில் உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் 55 வயதுக்கு மேற்பட்டவர்களை நூறு நாள் வேலைத்திட்டத்தில் பயன்படுத்தக் கூடாது என்று விதிமுறைகள் விதிக்கப்பட்டது.

இந்த திட்டத்தால் கிராமப்புற பெண்கள் அதிகளவு பயன்பெற்று வருகின்றனர். பெரும்பாலான குடும்பங்களின் வாழ்வாதாரம் நூறு நாள் வேலை வாய்ப்பை நம்பியே உள்ளது. தற்போது 55 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பணி இல்லாததால் அவர்கள் உணவுக்குக் கூட வழியின்றி தவித்து வரும் சூழல் உருவாகியுள்ளது.

எனவே தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தின்கீழ், 55 வயதிற்கு மேற்பட்டவர்கள் பணியில் ஈடுபடக் கூடாது என்ற விதியை தமிழக அரசு உடனடியாக தளர்த்த வேண்டும். அவர்களுக்கு தமிழக அரசு பணி வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Similar News