அபிநந்தனை பாகிஸ்தான் விடுவித்தன் பின்னணியில் உள்ள சுவாரஸ்யமான தகவல்! அப்படி மோடி என்ன சொன்னார்?

Update: 2021-03-02 13:41 GMT

இந்திய விமானப்படை (ஐஏஎஃப்) போர் விமானி விங் கமாண்டர் அபிநந்தன் வர்தமான் கடந்த 2019ஆம் ஆண்டில் இந்த நாளில் பாகிஸ்தான் ராணுவ வீரர்களை விமானம் மூலம் விரட்டி சென்ற போது பாகிஸ்தானில் பிடிபட்டார்.

அதன் பிறகு ரத்தக் காயங்களுடன் அவரது புகைப்படத்தை பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட போது பிரதமர் நரேந்திர மோடியின் அறிவுறுத்தலின் பேரில் அப்போதைய RA&W தலைவர் இந்திய விமானப்படையின் மிக் -21 விமானிக்கு தீங்கு விளைவித்தால் கடுமையான விளைவுகள் ஏற்படும் என்று பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ அமைப்பிடம் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.


பாலகோட் பகுதியில் தாக்குதல் நடந்த மறுநாளான பிப்ரவரி 27 அன்று ராஜூரி-மெந்தர் பகுதியில் இந்திய எல்லைக்குள் நுழைய முயன்ற பாகிஸ்தான் இராணுவத்தை அபிநந்தன் வெற்றிகரமாக தடுத்து நிறுத்தினார்.

அப்போது பாகிஸ்தான் ராணுவத்தை துரத்திச் சென்ற விங் கமாண்டர் அபிநந்தன், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் கிராமவாசிகளால் பிடிக்கப்பட்டு அவர் பாகிஸ்தான் ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டார்.

அப்போது இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே என்ன மாதிரியான பேச்சுவார்த்தை நடந்தது என்றும் பாகிஸ்தான் பிரதமர் அபிநந்தனை விடுவிப்பதற்கு காரணம் என்ன என்பது பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

அபிநந்தன் பிடிபட்டபோது பிப்ரவரி 28ஆம் தேதி பிரதமர் இம்ரான்கான் பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் சமாதானத்தின் ஒரு பகுதியாக அபிநந்தனை வெளியிடுகிறோம் என்று கூறியிருந்தார். இதனைத் தொடர்ந்து அபிநந்தன் பிடிபட்ட 60 மணி நேரத்திற்கு பிறகு மார்ச் 1ஆம் தேதி பலத்த பாதுகாப்புடன் இந்தியா வந்தடைந்தார்.

இதற்கு முன்னதாக ரத்த காயங்களுடன் அபிநந்தன் பாகிஸ்தான் ராணுவம் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிக்கும் வீடியோவும், அவர் ரத்த காயத்துடன் இருக்கும் போட்டோக்களையும் பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்டது.

இதனை தொடர்ந்து அபிநந்தனுக்கு எந்த துன்புறுத்தலும் அளிக்கக்கூடாது என்று தெரிவிக்குமாறு இந்திய உளவுத் துறை அதிகாரியிடம் பிரதமர் நரேந்திர மோடி கூறியதாகவும், இந்திய நாட்டில் இருக்கும் ஆயுதங்கள் தீபாவளிக்காக இல்லை என்றும் பாகிஸ்தானுக்கு நரேந்திர மோடி எச்சரிக்கை விடுத்ததாகவும் தெரிய வந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து அப்போதைய ரா தலைவர் அனில் தாஸ்மனா ஐ.எஸ்.ஐ.யின் துணைத் தளபதி சையத் அசிம் முனீர் அகமது ஷாவுக்கு இந்த செய்தியை அனுப்பியுள்ளார். மேலும் இந்திய விமான வீரரை தொட்டால் அதன் விளைவுகளை பாகிஸ்தான் சந்திக்க நேரிடும் என்றும் அவர் மீது சிறிய காயம் கூட ஏற்படாமல் பாதுகாப்பாக இந்தியாவிடம் ஒப்படைக்குமாறும் அவர் ஐ.எஸ்.ஐ.யின் லெப்டினன்ட் ஜெனரலிடம் தெரிவித்ததாக தற்போது வெளியாகி உள்ள தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளது.


மேலும் இதனை நிரூபிக்கும் விதமாக ராஜஸ்தானில் உள்ள ராணுவப்படை பிரித்திவி ஏவுகணையை தயார்நிலையில் வைத்திருக்க உத்தரவிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்த விஷயம் அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் வரை எதிரொலித்தது என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

இதன் விளைவாகவே பிப்ரவரி 28ஆம் தேதி பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன் விடுவிக்கப்படுவதாக நாடாளுமன்றத்தில் அறிவித்தார். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக இந்திய பிரதமர் நரேந்திர மோடியை தொடர்பு கொண்டு பேச இருந்ததாகவும் அதற்கான சூழ்நிலைகள் அமையவில்லை என்றும் அவர் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

விங் கமாண்டர் அபிநந்தனின் விடுதலை குறித்த முதல் உறுதிப்படுத்தப்பட்ட தகவல் பிரதமர் இம்ரான் கான் இந்த அறிவிப்பை வெளியிடுவதற்கு சற்று முன்பு வந்தது. ஐ.எஸ்.ஐ.யின் தலைவர் லெப்டினென்ட் ஜெனரல் ஷா பிப்ரவரி 28 காலை ரா தலைவருக்கு இந்திய விமான வீரரை விடுவிக்கும் முடிவு பற்றிய ஒரு ரகசிய கடிதத்தையும் அனுப்பியுள்ளார். பின்னர் இந்த கடிதம் குறித்து பிரதமர் மோடிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

ஐ.எஸ்.ஐ தலைவர் அகமது ஷா இந்த பதவியில் சேர்ந்து எட்டு மாதங்கள் மட்டுமே பணியாற்றிய பின்னர் 2019 ஜூன் மாதம் தனது பதவியில் இருந்து நீக்கப்பட்டார், அவருக்கு பதிலாக லெப்டினென்ட் ஜெனரல் பைஸ் ஹமீத் என்பவர் நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News