'கோவில் அடிமை நிறுத்து' இயக்கத்திற்கு 3 கோடி மக்கள் ஆதரவு!
தமிழக மக்களிடமே மீண்டும் கோவில்களை ஒப்படைக்க வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் மற்றும் எதிர்க்கட்சித்தலைவருக்கு சத்குரு கடிதம் எழுதியுள்ளார்.
தமிழகத்தில் பெரிய கோவில்கள் மற்றும் வருமானம் கிடைக்கும் கோவில்கள் அனைத்தும் அரசு கட்டுப்பாட்டில் உள்ள இந்து அறநிலையத்துறை நிர்வகித்து வருகிறது. இந்த முறையால் பல ஆயிரம் கோவில்கள் சரிவர பூஜை செய்யாமல் பாலடைந்து வருவது குறிப்பிடத்தக்கது.
இந்த முறையை ஒழித்துவிட்டு, தமிழக மக்களிடமே மீண்டும் கோவில்களை ஒப்படைக்க வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் மற்றும் எதிர்க்கட்சித்தலைவருக்கு சத்குரு கடிதம் எழுதியுள்ளார்.
தமிழக கோவில்களை அரசு கட்டுபாட்டிலிருந்து விடுவிக்க கோரி சத்குரு 'கோவில் அடிமை நிறுத்து' எனும் இயக்கத்தை துவங்கினார். இதற்கு தமிழகம் மட்டுமின்றி வெளிநாடு வாழ் தமிழர்களும் பலர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் 3 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் தங்களின் ஏகோபித்த ஆதரவினை மிஸ்டு கால்கள் மூலமும், சமூக வலைதளங்களின் வாயிலாகவும் இந்த இயக்கத்திற்கு ஆதரவு அளித்துள்ளனர். இதனை சுட்டிக்காட்டி ஈஷா யோகா மையத்தின் நிறுவனர் சத்குரு அவர்கள் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் "3 கோடிக்கும் மேற்பட்ட தமிழரின் நெஞ்சார்ந்த விருப்பத்தை இதன்மூலம் தெரிவிக்கிறேன். தமிழகத்தின் ஆன்மாவை முழு பொலிவிற்கு மீட்டெடுத்தவராய் நீங்கள் என்றென்றும் நினைவுக் கூரப்பட, பொறுப்புள்ள அரசியல் தலைவர்களாய் திராவிட பெருமையின் மையமான #கோவில்களை விடுவிக்குமாறு மன்றாடி கேட்கிறேன்." என்று குறிபிட்டுள்ளார்.
மேலும் அவர் எழுதியுள்ள கடிதத்தில் சத்குரு கூறியிருப்பதாவது: மக்களின் ஒருங்கிணைந்த குரல் ஒலித்திருக்கிறது. இந்து சமுதாயத்தினர், தனது புனிதமான வழிபாட்டுத் தலத்தை தானே பேணிப் பராமரித்து நிர்வகிக்க, அவர்களுக்கு உண்டான ஜனநாயக உரிமையை அரசு வழங்கவேண்டும் என்று ஒருங்கிணைந்த விதத்தில் குரல் எழுப்பியிருக்கிறார்கள்.