ராமர் கோவில் விவகாரத்தை மீண்டும் அரசியலாக்கும் காங்கிரஸ்? : தெளிவாக விளக்கிய ராமர் கோவில் அறக்கட்டளை!

Update: 2021-06-15 12:27 GMT

உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமான பணி விரைவாக நடந்து வருகிறது. இந்த கோயில் கட்டுவதற்காக இந்தியாவின் பல இடங்களில் இருந்து ராமர் கோயில் அறக்கட்டளைக்கு பண உதவிகள் வழங்கப்பட்டன. இந்த சமயத்தில்  ராமர் கோவில் அறக்கட்டளை வாங்கிய நிலத்தில் முறைகேடு நடந்துள்ளதாக காங்கிரஸ், சமாஜ்வாடி, ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. இந்த குற்றச்சாட்டுக்கு ராமர் கோவில் அறக்கட்டளை மறுப்பு தெரிவித்துள்ளது.

அறக்கட்டளையின் பொதுச்செயலாளரும், விஷ்வ இந்து பரிஷத்தை சேர்ந்தவருமான சம்பத் ராய் இதுதொடர்பாக வெளியிட்ட அறிக்கையில் "அயோத்தியில் ஏற்கனவே உள்ள குழந்தை ராமர் கோவிலை சுற்றியுள்ள பகுதிகளை விரிவுபடுத்துவதற்காக அறக்கட்டளை சார்பில் நிலம் வாங்கி வருகிறோம். போக்குவரத்து எளிதாக இருப்பதற்காக, கோவில் வளாகத்தை சுற்றியுள்ள நிலம் தேவைப்பட்டது. அதற்காக வீடுகளும், சிறு கோவில்களுமாக இருந்த அந்த நிலத்தை வாங்கினோம். அங்கு வசித்தவர்களை வேறு இடத்தில் குடியமர்த்துவதற்காக, அயோத்தியில் பாக் பிஜைசி என்ற இடத்தில் உள்ள 12 ஆயிரத்து 80 சதுர மீட்டர் நிலத்தை அறக்கட்டளை வாங்கியது.

அந்த நிலத்துக்கு ரூ.2 கோடியே 16 லட்சம் விலை என்ற அடிப்படையில், 2017 ஆம் ஆண்டு முதல்கட்ட ஒப்பந்தம் போடப்பட்டு இருந்தது. முன்பணமாக ரூ.92 லட்சம் கொடுக்கப்பட்டு இருந்தது. அது, 2017- ஆம் ஆண்டின் சந்தை விலை அடிப்படையில் மதிப்பிடப்பட்ட விலை என்பதால் குறைவாக இருந்தது. அப்போது, ராமர் கோவில் கட்ட அனுமதிப்பதற்கான உச்சநீதிமன்றம்  தீர்ப்பு வரவில்லை. அந்த தீர்ப்பு, 2019-ம் ஆண்டு நவம்பர் 9-ந் தேதி வெளியானது. அதன்பிறகு நிலத்தின் மதிப்பு ஏறக்குறைய 10 மடங்கு கூடிவிட்டது. அதனால்தான், கடந்த மார்ச் மாதம் அந்த நிலத்தை ராமர் கோவில் அறக்கட்டளை வாங்கியபோது, விலை 9 மடங்கு அதிகரித்துவிட்டது.

நிலத்தின் உரிமையாளர்கள் 2017-ம் ஆண்டே அதை வாங்கியவர்களுக்கு கடந்த மார்ச் மாதம் தான் பத்திரப்பதிவு செய்து கொடுத்தனர். அடுத்த சிறிது நேரத்தில், ராமர் கோவில் அறக்கட்டளைக்கு நிலம் பதிவு செய்யப்பட்டது. இருப்பினும், சந்தை விலையை விட குறைவான விலையில்தான் அதை வாங்கி இருக்கிறோம். எனவே, நிலம் வாங்கியதில் எந்த முறைகேடும் நடக்கவில்லை. அடுத்த ஆண்டு உத்தரபிரதேச சட்டசபை தேர்தல் நடக்கிறது. அதில் ஆதாயம் அடைவதற்காக, இந்த பொய் குற்றச்சாட்டை சுமத்துகிறார்கள்." என்று அவர் கூறினார்.

இந்த குற்றச்சாட்டு அரசியல் உள்நோக்கம் கொண்டது என்று ராமஜென்மபூமி தலைமை அர்ச்சகர் ஆச்சார்ய சத்யேந்திர தாஸ் கூறியுள்ளார்.இதற்கிடையே, அயோத்தி மாவட்ட ஆட்சியர்  அனுஜ்குமார் ஜா கூறுகையில், ''ராமர் கோவில் அறக்கட்டளை வாங்கியுள்ள நிலம் முக்கியமான இடத்தில் அமைந்துள்ளது. அங்கு அயோத்தி ரெயில் நிலையத்துக்கான முக்கிய நுழைவாயில் கட்டப்பட உள்ளது. அதன்பிறகு அந்த இடம் பெரிய வணிக தலமாக மாறிவிடும்'' என்றார்.

Tags:    

Similar News