ஈஷாவில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகளுக்கு சிறப்பு யோகா வகுப்பு! பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்பு!
மத்திய, மாநில அரசுகளில் பணியாற்றும் அரசு அதிகாரிகளுக்கான 5 நாள் சிறப்பு யோகா வகுப்பு மற்றும் தலைமைப் பண்பு மேம்பாட்டு பயிற்சி கோவை ஈஷா யோகா மையத்தில் மார்ச் 21-ம் தேதி முதல் மார்ச் 25-ம் தேதி வரை நடைபெற்றது.
இந்திய அரசு பணியாளர் மற்றும் பயிற்சித் துறையுடன் (DoPT - Department of Personal and Training) இணைந்து நடத்தப்பட்ட இப்பயிற்சி வகுப்பில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், ஐ.எஃப்.எஸ் அதிகாரிகள் உட்பட 61 அரசு அதிகாரிகள் பங்கேற்றனர். அவர்களுக்கு 'ஷாம்பவி மஹாமுத்ரா க்ரியா' என்ற சக்திவாய்ந்த யோக பயிற்சி கற்றுக்கொடுக்கப்பட்டது. அத்துடன், உடல் மற்றும் மன நலனை மேம்படுத்துவதற்கான எளிமையான யோக பயிற்சிகளும் கற்றுக்கொடுக்கப்பட்டன.
அரசு அதிகாரிகள் மன அழுத்தம் நிறைந்த சூழ்நிலைகளை சரியாக கையாள்வது, உள்நிலையில் அமைதியையும் முழுமையையும் உணர்வது, மற்றவர்களுடனான நட்புறவை மேம்படுத்துவது, மனதில் தெளிவு, உணர்ச்சியில் சமநிலையை உருவாக்கி முடிவெடுக்கும் திறனை மேம்படுத்துவது போன்றவை இந்த பயிற்சி வகுப்பின் பிரதான நோக்கங்கள் ஆகும். மேலும், அவர்கள் இவ்வகுப்பில் கற்றுக்கொடுக்கப்பட்ட பயிற்சிகளை தொடர்ந்து செய்து வருவதன் மூலம் நீண்ட நாட்களாக அவர்கள் சந்தித்து வரும் உடல் மற்றும் மன ரீதியான பிரச்சினைகளில் இருந்தும் விடுபட முடியும்.