எகிப்தை சிறப்பு விருந்தினராக அழைத்த இந்தியா - பிரதமர் கொடுத்த அற்புத உரை!

அரபிக்கடலின் ஒரு பகுதியில் இந்தியாவும், மற்றொரு பகுதியில் எகிப்தும் இருந்து கடல் பாதுகாப்பை உறுதி செய்கிறது.

Update: 2023-01-27 01:01 GMT

உலகின் தொன்மையான நாகரீகங்களில் இந்தியாவும், எகிப்தும் இடம்பெறுகின்றன. நாம் பல்லாயிரம் ஆண்டுகளாக தொடர்ச்சியான உறவை கொண்டிருக்கிறோம். நான்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் எகிப்துடனான வாணிபம், குஜராத்தில் உள்ள லோத்தல் துறைமுகம் மூலம் நடந்துள்ளது. உலகில் பல்வேறு மாற்றங்கள் நடந்துள்ள போதும், நமது உறவுகள் நிலையாக உள்ளன. நமது ஒத்துழைப்பு தொடர்ந்து வலுப்பட்டு வருகிறது. கடந்த சில ஆண்டுகளில் நமது ஒத்துழைப்பு ஆழமாகியுள்ளது.


இந்த ஆண்டு ஜி-20 தலைமைத்துவத்தை பெற்றுள்ள நிலையில், அதன் விருந்தினர் நாடாக எகிப்தை இந்தியா அழைத்துள்ளது. இது நமது தனித்துவ நட்புறவை பிரதிபலிக்கிறது. அரபிக்கடலின் ஒரு பகுதியில் இந்தியாவும், மற்றொரு பகுதியில் எகிப்தும் இருக்கிறது. இந்த இரு நாடுகளின் ராணுவ ரீதியிலான ஒத்துழைப்பு ஒட்டுமொத்த பிராந்தியத்தின் அமைதி மற்றும் வளத்தை மேம்படுத்த உதவும். எனவே இன்றைய சந்திப்பின் போது ராணுவ ரீதியிலான ஒத்துழைப்பு நிலையில் இருதரப்பு பங்கேற்பை அதிகப்படுத்த அதிபர் சிசியும், நானும் முடிவு செய்துள்ளோம். இந்தியா- எகிப்து ராணுவ ஒத்துழைப்பின் கீழ் அரசியல், பாதுகாப்பு பொருளாதாரம், அறிவியல் துறைகளில் மாபெரும் ஒத்துழைப்புக்கான நீண்டகால கட்டமைப்பை மேம்படுத்துவது என்று நாங்கள் முடிவு செய்துள்ளோம்.


உலகெங்கிலும் பயங்கரவாத சம்பவங்கள் பரவலாக இருப்பது குறித்து இந்தியாவும், எகிப்தும் கவலை கொண்டுள்ளன. மனித குலத்திற்கு மிகவும் கடுமையான பாதுகாப்பு அச்சுறுத்தலாக பயங்கரவாதம் உள்ளது என்பதில் நாங்கள் ஒருமித்த கருத்தை கொண்டிருக்கிறோம். எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை முடிவுகட்ட ஒருங்கிணைந்த நடவடிக்கை தேவை என்பதை இரு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன. இதற்கு சர்வதேச சமூகத்தை எச்சரிக்க நாங்கள் இணைந்து தொடர்ந்து முயற்சி செய்கிறோம்.

Input & Image courtesy: Maalaimalar

Tags:    

Similar News