யோகா - சமநிலை, கருணை, சமத்துவம், அமைதி, நல்லிணக்கம் ஆகியவற்றை உறுதிப்படுத்தும் ஒரு அறிவியல் - குடியரசு துணைத்தலைவர்.!
யோகா - சமநிலை, கருணை, சமத்துவம், அமைதி, நல்லிணக்கம் ஆகியவற்றை உறுதிப்படுத்தும் ஒரு அறிவியல் - குடியரசு துணைத்தலைவர்.!
கொவிட்-19 ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், கல்வி நிறுவனங்கள் ஆன்லைன் மூலம் நடத்தும் பாட நிகழ்ச்சிகளில், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சிறந்த முறையான யோகா பயிற்சியையும் ஒரு படிப்பாகச் சேர்க்க வேண்டும் என்று குடியரசு துணைத் தலைவர் திரு. எம்.வெங்கையா நாயுடு வலியுறுத்தியுள்ளார்.
சர்வதேச யோகா தினத்தையொட்டி, ஸ்பிக் மேகாய் ஏற்பாடு செய்திருந்த டிஜிடல் ' யோகா மற்றும் தியான முகாம்' நிகழ்ச்சியில் உரையாற்றிய குடியரசு துணைத் தலைவர், உலகம் முழுவதும் லட்சக்கணக்கான பேரின் வாழ்க்கையை வெற்றிகரமாக மாற்றியுள்ள யோகா, உலகத்துக்கு இந்தியா வழங்கிய தனித்துவமான கொடை என்று கூறினார்.
குழந்தைகளுக்கு யோகாவை சிறிய வயதிலேயே அறிமுகப்படுத்த வேண்டும் என்று அவர் கூறினார். ''குழந்தைகளுக்கு 13 யோகா பயிற்சிகள் மற்றும் தோற்றங்களை 'யுனிசெப் கிட் பவர்' பட்டியலிட்டிருப்பது கண்டு மகிழ்ச்சி அடைகிறேன்'' என அவர் கூறினார்.
5000 ஆண்டு பழமையான யோகா பாரம்பரியம் வெறும் உடற்பயிற்சி அல்ல என்று குறிப்பிட்ட அவர், '' அது சமநிலை, கருணை, சமத்துவம், அமைதி, நல்லிணக்கம் ஆகியவற்றை உறுதிப்படுத்தும் ஒரு அறிவியல்'' என்று கூறினார். தோரணைகள் , மூச்சுப்பயிற்சி, தியான உத்திகள் போன்ற யோகாவின் பல்வேறு அம்சங்கள் ஒன்று சேர்ந்து, மனித உடலிலும், மனதிலும் பல வழிகளில் ஆக்கபூர்வமான மாற்றத்தைக் கொண்டு வருகிறது என அவர் மேலும் தெரிவித்தார்.
யோகாவை ஆரோக்கியத்துக்கான தீர்வாக மாற்றும் மகத்தான வாய்ப்புகள் குறித்து கண்டறிவதற்கான பெருமளவிலான அறிவியல் பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்திய திரு. நாயுடு, யோகா ஒரு சிகிச்சை முறை என்று கூறியதுடன், யோக சிகிச்சை மிகவும் பிரசித்தி பெற்றது என்றார். பல நோய்களை குணப்படுத்துக்கூடிய ஆற்றல் இதற்கு உண்டு என்பது அறிவியல் பூர்வமான பல ஆராய்ச்சிகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.
கொவிட்-19 தொற்று மக்களுக்கு உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்று குறிப்பிட்ட குடியரசு துணைத்தலைவர், ''உலகமே தற்போது சவாலான காலகட்டத்தைச் சந்தித்து வருகிறது. இந்தத் தொற்று நம்மை வெற்றிகொள்ள நாம் அனுமதிக்க முடியாது. நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து மிக வலிமையான போராட்டத்தை மேற்கொண்டு, உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் ஆரோக்கியமாக இருக்கிறோம் என்பதை உறுதி செய்யவேண்டும்'', என்று கூறினார்.