அ.தி.முக - அ.ம.மு.க இணைப்பு - சசிகலா விடுதலை - தி.மு.க கப்பலில் விழப்போகும் ஓட்டை - 2021 தேர்தல் கேம் பிளான்! ஒரு அலசல்!
அ.தி.முக - அ.ம.மு.க இணைப்பு - சசிகலா விடுதலை - தி.மு.க கப்பலில் விழப்போகும் ஓட்டை - 2021 தேர்தல் கேம் பிளான்! ஒரு அலசல்!
என்ன தான் கொரோனோ தொற்று பயத்தில் ஊரடங்கு, நிவாரண உதவிகள் என கட்சிகள் இயங்கினாலும் உள்ளூர கொரோனோவை விட 2021 சட்டமன்ற தேர்தல்தான் அரசியல் பிரமுகர்களையும், கட்சி தலைவர்களையும் தூங்க விடாமல் செய்கிறது. கிட்டத்தட்ட இரு திராவிட கட்சிகளுக்குமே இது வாழ்வா சாவா போராட்டமே, ஜெயலலிதா மற்றும் கருணாநிதி இருபெரும் தலைவர்கள் இல்லாமல் முதல்வர் பதவிக்கு நடக்கவிருக்கும் முதல் தேர்தல். சுருங்க சொல்வதென்றால் தமிழக மக்களின் அடுத்த 20 ஆண்டுகள் எந்த மாதிரியான அரசியல் பாதையை விரும்புகிறார்கள் என முடிவு செய்யும் தேர்தல் வருகின்ற 2021 தமிழக சட்டமன்ற தேர்தல்.
இவ்வாறாக முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலில் கட்சிகளின் குறிப்பாக திராவிட கட்சிகளின் வியூகமோ நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் வளர்ந்து கொண்டிருக்கிறது.
தி.மு.க அதன் கூட்டணி கட்சிகளை கிட்டத்தட்ட கடந்த பராளுமன்ற தேர்தலில் முடிவு செய்து விட்டது. மேலும், அவர்களில் சிலர் தற்போது மனக்கசப்பில் இருந்தாலும் வேறு வழியில்லாமல் அவர்களை வைத்து தி.மு.க-வும், தி.மு.க-வை வைத்து அவர்களும் ஓட்ட வேண்டிய நிர்பந்தத்தில் உள்ளனர். ஏற்கனவே கட்சியில் சீனியர்களை பட்டத்து இளவரசர் கலந்து ஆலோசிக்கவில்லை, அறிக்கைகளை தனித்து விடுகிறார் என இரண்டாம் கட்ட தலைவர்களும், தனியார் ஏஜெண்சியின் பிடியில் கட்சியின் செயல்பாடுகள் செல்வதை கட்சியினரும் விரும்பாத நிலையில் படகை செலுத்த வேண்டிய கட்டாயத்தில் தி.மு.க தள்ளப்படுள்ளது.
கட்சியின் தலைவரோ யார் என்ன மனநிலையில் இருந்நாலும் சரி "நான் கலைஞரின் மகன், அவர் இல்லாத இந்த முதல் தேர்தலில் ஆட்சி கட்டிலில் நான் அமர்ந்தே தீருவது தான் என் குறிக்கோள்" என குடும்பம், ஏஜென்சி சொல்வதை கண்ணை மூடிக்கொண்டு கேட்கிறார். மாவட்ட ரீதியில் செயல்படும் செயலாளர்களோ "போதும்டா சாமி இதுக்கு மேல செலவு பண்ண காசில்லை" என வெளிப்படையாகவே புலம்ப ஆரமித்துவிட்டனர். படகை செலுத்துபவர்கள் துடுப்பை வேகமாக போட வேண்டும் என்பது மரபு. ஆனால், தி.மு.க என்னும் படகை செலுத்த வேண்டிய கட்சிக்காரர்கள், இரண்டாம் கட்ட தலைவர்கள் துடுப்பை வெறுமனே ஆட்டி பாவனை செய்கிறார்கள். தலைமைக்கோ இது வேகம் என்று தோன்றலாம் ஆனால் படகு நகரவில்லை என புரிய நாள் ஆகலாம்.