தமிழகத்தில் நாசவேலைக்கு சதியா? - புழல் ஜெயிலில் 3 முஸ்லிம் பயங்கரவாதிகளிடம் விசாரணை!!
தமிழகத்தில் நாசவேலைக்கு சதியா? - புழல் ஜெயிலில் 3 முஸ்லிம் பயங்கரவாதிகளிடம் விசாரணை!!
இலங்கையில் கடந்த ஏப்ரல் மாதம் 21 - ஆம் தேதி ஈஸ்டர் பண்டிகை தினத்தில் நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்பில் 258 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் இலங்கையை உலுக்கியது.
தேசிய தவ்ஹீத் ஜமாத் என்கிற முஸ்லிம் தீவிரவாத அமைப்பு இந்த குண்டு வெடிப்பிற்கு மூளையாக செயல்பட்டது. சர்வதேச பயங்கரவாத அமைப்பான ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் நெருங்கிய தொடர்பில் இந்த அமைப்பு இருந்தது தெரியவந்தது.
இலங்கையை போன்று இந்தியாவிலும் தற்கொலை படை தாக்குதலுக்கு பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளது தெரியவந்தது. தமிழகத்தில் மிகப்பெரிய நாசவேலையை அரங்கேற்றவே பயங்கரவாதிகள் திட்டம் போட்டதாகவும், அது சரியாக கை கூடாத காரணத்தினாலேயே தங்களது தாக்குதல் திட்டத்தை பயங்கரவாதிகள் இலங்கையில் அரங்கேற்றியதாகவும் திடுக்கிடும் தகவல்கள் வெளியாயின.
இலங்கையில் குண்டு வெடிப்பு நடைபெற்ற சில தினங்களிலேயே தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தமிழகத்தில் அதிரடி சோதனையை தொடங்கினர். அதுபோல கேரளாவிலும் தனியாக விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணையின் போது இலங்கை குண்டு வெடிப்பில் தமிழகத்தில் உள்ள சிலருக்கும் தொடர்புகள் இருப்பதாக சந்தேகம் எழுந்தது.
இதன் அடிப்படையிலேயே சில நாட்களுக்கு முன்னர் பூந்தமல்லியில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தினர். அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி இருந்த இலங்கையைச் சேர்ந்த தானுகா ரோஷன் உள்பட 3 பேர் பிடிபட்டனர்.
தானுகா ரோஷன் இலங்கையில் இருந்து கள்ளத் தோணியில் தமிழகத்துக்கு வந்தது தெரிய வந்தது. இலங்கை குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடையவர்களால் தானுகா ரோஷன் ஈர்க்கப்பட்டவர் என்கிற தகவலும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனை தொடர்ந்து 2 மாதங்களாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் தமிழகத்தில் சந்தேக நபர்களை பிடித்து தீவிரமாக விசாரித்து வருகிறார்கள். இதன் அடிப்படையிலேயே கோவையில் முகாமிட்டு தொடர் சோதனையிலும் ஈடுபட்டனர்.