உயிர்நீத்த 40 வீரர்களின் குடும்பங்களுக்கும் தலா ₹5 லட்சம் வழங்க உள்ளதாக அமிதாப் பச்சன் அறிவிப்பு

உயிர்நீத்த 40 வீரர்களின் குடும்பங்களுக்கும் தலா ₹5 லட்சம் வழங்க உள்ளதாக அமிதாப் பச்சன் அறிவிப்பு

Update: 2019-02-19 18:07 GMT

புல்வாமா தற்கொலைப் படை தாக்குதலில் உயிர்நீத்த 40 சி.ஆர்.பி.எஃப் வீரர்களின் குடும்பங்களுக்கு தலா ₹5 லட்சம் வழங்குவதாக நடிகர் அமிதாப் பச்சன் அறிவித்துள்ளார். காஷ்மீரில் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பு நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 40 மத்திய படை வீரர்கள் பலியானது ஒட்டுமொத்த இந்தியர்களை ஆவேசம் அடையச் செய்துள்ளது. 40 வீரர்களின் உயிர்த் தியாகத்துக்காக பயங்கரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் ஒவ்வொருவர் மனதிலும் எழுந்துள்ளது.


இதனையடுத்து மிகவும் முக்கியத்துவமான நாடு என வர்த்தகத்துக்கான முன்னுரிமையுடன் பாகிஸ்தானுக்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை இந்தியா ரத்து செய்தது. பாகிஸ்தானில் உள்ள இந்தியாவுக்கான தலைமை தூதரை உடனடியாக டெல்லி வருமாறு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. மேலும் வன்முறையாளர்கள், வதந்திகளை பரப்புபவர்கள், பயங்கரவாதிகளின் மதம் மற்றும் அரசியல் சார்புகளைப்பற்றி கருதாமல், கருணை காட்டாமல் கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு காஷ்மீர் கவர்னர் உத்தரவிட்டுள்ளார். 


இந்த தாக்குதலில் தமிழக வீரர்களான தூத்துக்குடியைச் சேர்ந்த சுப்பிரமணியன், அரியலூரைச் சேர்ந்த சிவசந்திரன் இந்த தாக்குதலில் உயிர்நீத்துள்ளனர். அவர்களது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.  தமிழக அரசு இரு குடும்பத்தாருக்கும் தலா ₹20 லட்சம் நிதி அறிவித்துள்ளது. மேலும் உயிரிழந்தர்வர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்றும் கூறியுள்ளது. இந்த நிலையில், தற்கொலைப்படை தாக்குதலில் உயிர்நீத்த 40 வீரர்களின் குடும்பங்களுக்கும் தலா ரூ.5 லட்சம் வழங்குவதாக பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் அறிவித்துள்ளார்.


Similar News