கொந்தகை அகழாய்வில் முதல்முறையாக குழந்தையின் எலும்புக்கூடு கண்டெடுப்பு.!
கொந்தகை அகழாய்வில் முதல்முறையாக குழந்தையின் எலும்புக்கூடு கண்டெடுப்பு.!
கடந்த வெள்ளிக்கிழமை ஆறாவது கட்ட அகழாய்வுப் பணிகளின் போது கீழடியிலிருந்து 2கிமீ தொலைவில் இருக்கும் கொந்தகை கிராமத்தில் ஒரு குழந்தையின் எலும்புக்கூடு கண்டறியப்பட்டது. கொந்தகை ஒரு இடுகாடாக இருந்திருக்கக் கூடும் என்று கருதப்படுகிறது.
75செமீ உயரம் இருந்த அந்தக் குழந்தையின் எலும்புக்கூடு இரண்டு முதுமக்கள் தாழிகளுக்கு இடையே அரை மீட்டர் ஆழத்தில் புதைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இன்னும் இரண்டு நாட்களில் குழந்தையின் பாலினம் என்ன என்று தெரிந்துவிடும் என தொல்லியல் துறை இணை இயக்குநரும இந்த அகழாய்வு பணியின் பொறுப்பாளருமான சிவானந்தம் தெரிவித்துள்ளார்.
மேலும் இரண்டு பெரியவர்களின் எலும்புக்கூடுகளும் தற்போது கண்டறியப்பட்டுள்ளன. இவற்றையும் சேர்த்து மொத்தமாக இதுவரை 15 முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இந்தக் கட்ட அகழாய்வின் குறிப்பிடத்தக்க கண்டுபிடிப்பாக கருதப்படும் 17ம் நூற்றாண்டைச் சேர்ந்த தங்க நாணயம் அகரம் கிராமத்தில் இருந்து அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளது. நாணயத்தின் ஒரு பக்கத்தில் நாமம் போன்ற ஒரு குறியீடும், நடுவில் சூரியன் மற்றும் கீழ்ப்பகுதியில் சிங்கம் போன்று தோற்றமளிக்கும் உருவங்களும் அச்சிடப்பட்டுள்ளன. மறு பக்கத்தில் 12 புள்ளிகளும் அதற்குக் கீழே இரண்டு கைகளும் கால்களும் உடைய ஒரு உருவமும் பொறிக்கப்பட்டுள்ளன. சில ஓடுகளும் பானைகளும் கூட அகழ்வாராய்ச்சி நடைபெறும் பகுதிகளில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
சென்ற வருடம் செப்டம்பர் மாதத்தில் தமிழ்நாடு தொல்லியல்துறை துறை கீழடி அகழ்வாய்வில் கண்டெடுக்கப்பட்ட தொல்பொருட்களின் காலம் பொயுமு 1ம் நூற்றாண்டிலிருந்து பொயு 6ம் நூற்றாண்டுக்குள் கணக்கிடப்படலாம் என்று தெரிவித்துள்ளது. இது ஏற்கனவே கணிக்கப்பட்ட பொயு 3ம் நூற்றாண்டை விட 300 வருடங்கள் பழமையானது. "கங்கைச் சமவெளியில் நகரமயமாதல் நிகழ்ந்த அதே காலத்தில், அதாவது பொயு 6ம் நூற்றாண்டில் தான் வைகைச் சமவெளியிலும் நகரமயமாதல் நிகழ்ந்திருக்கிறது" என்று தொல்லியல் துறை ஆணையர் உதயசந்திரன் கூறியுள்ளார். 2017-18 ஆம் ஆண்டுகளில் நடந்த நான்காம் கட்ட அகழாய்வின் போது கிடைத்த 5,820 தொல்பொருட்களின் காலக் கணிப்பிலிருந்து இந்த தகவல் கிடைத்துள்ளது.