அடுத்ததாக ராமர், சீதை ராவணனால் கடத்தப்பட்ட பின் பிராட்டியாரை எவ்வாறு நடத்தினார் என்பது பற்றி கட்டவிழ்த்து விடப்பட்ட பொய்கள். ஒரு மதக் கடவுள் எவ்வாறு மனிதர்களுக்கு உதாரணமாக வாழ்ந்து காட்டிவிட்டுச் சென்றார் என்பதைப் பற்றிய ஒரு இதிகாசத்தைப் பற்றி பேசுகிறோம் என்ற உணர்வே இல்லாமல் ஏதோ தமிழ் சினிமாவில் காதலன் காதலி சந்திப்பைப் பற்றி விமர்சனம் செய்வது போல் பேசியிருக்கிறான் இந்த அறிவிலி.
நியாயமாக ராமர் தான் சீதா தேவியைப் பார்க்க வேண்டுமென்ற ஆவலில் ஓடோடிச் சென்றிருக்க வேண்டும் என்றும் ஆனால், சீதா தேவி தான் அனுமனிடம் தன்னை தன் கணவனிடம் அழைத்துச் செல்லுமாறு கேட்டு, அவ்வாறே அனுமனும் அழைத்து வந்து ராமரிடம் சேர்ப்பித்ததாக கூறுகிறான். ஆனால் வால்மீகி இராமாயணத்திலோ சீதை ராமரைப் பார்க்கக் கோரும் தகவலை அனுமன் ராமரிடம் சென்று சேர்ப்பதாகவும், ராமர் சீதையை நன்கு அலங்கரித்து ஒரு அரச குலப் பெண்ணிற்குரிய பாவனையில் அழைத்து வருமாறு விபீஷணனுக்கு உத்தரவிடுகிறார். இவன் வால்மீகி இராமாயணத்தையே படித்துப் பார்க்காமல் மனம் போன போக்கில் பேசியுள்ளான் என்பது இதிலிருந்தே தெரிகிறது.
"பத்து மாசமா அவன் கூட இருந்தியே எதுவுமே நடக்கலையா" என்று ராமர் சீதை மீது சந்தேகப்பட்டு கேட்டதாக சொல்லியிருக்கிறான். ஆனால் ராமர் சொன்னதென்னவோ "மனிதனால் ஆகக் கூடிய அனைத்தையும் செய்து எதிரியைக் கொன்று உன்னை மீட்டு விட்டேன். விதிவசத்தால் ஒரு அரக்கனால் என்னிடமிருந்து பறித்துச் செல்லப்பட்டதால் உனக்கு இழைக்கப்பட்ட தவற்றையும் ஒரு மனிதனாக சரி செய்து விட்டேன்". இந்த உரையைக் கேட்டுக் கொண்டிருந்த சீதையின் கண்களிலிருந்து கண்ணீர் வழிகிறது. தனக்கருகில் நின்று கொண்டிருக்கும் தனது இதயத்திற்குப் பிரியமான சீதையைப் பாரக்கும் போது அவள் மீது பொதுமக்கள் வீசப்போகும் அவதூறுகளை எண்ணி ராமரின் இதயம் கலங்குகிறது (யுத்த காண்டம், சருக்கம் 115, ஸ்லோகம் 11). "ராவணனின் தீய பார்வைகளுக்கு ஆளான உன்னை நான் எவ்வாறு ஏற்க முடியும்" என்று கேட்கும் ராமர், "இங்கிருந்து உன் விருப்பப்படி நீ எங்கு வேண்டுமானாலும் சென்று கொள்ளலாம்" என்கிறார். பொதுவாக பெரியாரைப் பின்பற்றும் பகுத்தறிவாளர்கள் பெண் சுதந்திரத்தைப் பற்றி வாய் கிழியப் பேசுவார்கள். இங்கு "உன் விருப்பப்படி செல்" என்று ராமன் சொல்வது அக்காலத்தில் நினைத்துக் கூடப் பார்க்க முடியாத விஷயமாக இருந்திருக்கும். ஆனால் அதைப் பற்றி பெரியாரிஸ்டுகள் வாய் திறப்பதில்லை. மாறாக ராமர் சீதையை தீயில் இறங்கி கற்பை நிரூபிக்கச் சொன்னதாக கதை கட்டி விடுகிறார்கள்.
ராமரின் பேச்சைக் கேட்டுத் துடிதுடித்துப் போன சீதை தனது பிறப்பையும் கற்பையும் பற்றி விளக்கிவிட்டு "இதற்கு ஒரே தீர்வு நான் உயிர் துறப்பது தான். எனக்கு இதற்கு மேல் வாழ விருப்பம் இல்லை" என்று கூறி லட்சுமணனை தீ மூட்டச் சொல்கிறார் (சருக்கம் 116, ஸ்லோகம் 18). சீதை அக்னிச் பிரவேசம் செய்ததைக் கண்டு அங்கிருந்த அனைவரும் அலறுவதைக் கேட்டுக் கொண்டிருந்த ராமரின் கண்கள் கண்ணீரால் குளமாகியிருந்தது என்று யுத்த காண்டத்தின் 117வது சருக்கத்தின் முதல் ஸ்லோகத்தில் வருகிறது. பின்னர் அக்னி தேவனால் பிரவேசித்த நிலையிலேயே ராமனிடம் சீதை திருப்பி அளிக்கப்படும் போது, பொதுமக்களின் பார்வையில் இந்த சுத்திப் பரிட்சை அவசியமானது என்று கூறும் ராமர் "என் எண்ணங்களில் எப்போதும் குடி கொண்டிருக்கும் ஜனகரின் மகளான சீதை என் மீது சிதையாத முழுமையான அன்பு வைத்திருக்கிறாள் என்று நான் அறிவேன்" என்று கூறுகின்றார் (யுத்த காண்டம், சருக்கம் 118, ஸ்லோகம் 13-15. "நான் அறிந்த உண்மையை இந்த மூன்று உலகங்களும் அறிவதற்காகவே சீதை அக்னிச் பிரவேசம் செய்த போது தடுக்கவில்லை" என்று ராமர் கூறியதாக 17வது ஸ்லோகத்தில் வருகிறது.
கடைசிப் பகுதிய உத்தர காண்டம் ராமாயண புத்தகங்களில் பெரும்பாலும் சேரக்கப்பவதில்லை என்பதால் இந்துக்கள் யாருக்கும் ராவணனுடனான போரில் வென்ற பின் ராமர்-சீதையின் வாழ்வில் என்ன நடந்தது என்பது யாருக்கும் தெரியாது என்று இவர்களாகவே ஊகித்துக் கொண்டு "இப்படி உத்தமினு நிரூபிச்சு நான் உன் கூட வாழனுமானு அழுது புலம்பி குழிக்குள்ள விழுந்து செத்துடுறாங்க" என்று மற்றுமொரு பொய்யை போகிற போக்கில் அவிழ்த்து விட்டிருக்கின்றனர். ஆனால், நயன்தாரா சீதையாக நடித்த தற்கால 'ராமராஜ்யா' என்ற ராமாயண சினிமாவில் கூட இந்த நிகழ்வுகள் வருவது பெரியார் அடிப்பொடிகளுக்குத் தெரியாமல் இருப்பதில் ஆச்சரியம் இல்லை. ஆபாசத்தை மட்டுமே தேடும் இவர்களது கண்களுக்கு உண்மை எப்போதும் புலப்படுவதில்லை.
அன்றும் சரி இன்றும் சரி, சீதையைப் பயன்படுத்தி நரம்பில்லாத நாக்கு எப்படி வேண்டுமானாலும் பேசும் என்பதை நிரூபிக்கும் விதமாகத் தான் அறிவற்றவர்கள் நடந்து கொள்கிறார்கள். அன்று "ராவணன் தன் மடியில் கிடத்தி கடத்திச் சென்ற சீதையுடன் ராமர் எப்படி மகிழ்ச்சியாக இருக்கலாம்? நாமும் இனி நம் மனைவிகளின் தவறான நடத்தையை கண்டுகொள்ளாமல் விட்டு விடலாம். அரசன் எவ்வழியோ மக்களும் அவ்வழி தானே" என்று பேசிய நாக்குகள் இன்று "கட்டின பொண்டாட்டினு கூட பாக்காம சந்தேகப்படுகிறானே ராமன்" என்று ஏசுகின்றன. 'Caesar's wife must be above suspicion' என்ற சொல்லாடலை நாக்கூசாமல் பயன்படுத்தும் இவர்கள், தனது மக்களின் ஏச்சுத் தாங்காமல் ராஜ் தர்மத்துக்காக மனைவியைப் பிரிய நேரிட்ட ராமரை வசை பாடுகின்றனர்.
அந்த வசையைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் ராமர் தனது தம்பி லட்சுமணனிடம் சீதையை வால்மீகியின் ஆசிரமத்தில் விட்டு வருமாறு உத்தரவிடுகையில் துயரத்தில் கண்கள் குளமாக யானையின் பெருமூச்சைப் போன்று ஒரு பெருமூச்சு ராமனிடம் இருந்து வெளிப்பட்டதாக வால்மீகி ராமாயணம் குறிப்பிடுகிறது. சீதையை பூமாதேவி அழைத்துச் சென்ற பின் ராமர் எவ்வாறு துயரத்தில் ஆழ்ந்து சாமானியனைப் போல் கோபம், துக்கம், அழுகை உள்ளிட்ட உணர்வுகளை வெளிப்படுத்தினார் என்பது வால்மீகி இராமாயணத்தில் உத்திர காண்டத்தின் சருக்கம் 111ல் விரிவாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
சீதையின் இழப்பால் ராமருக்கு உலகமே இருண்டு விட்டது போல் இருந்ததாக சருக்கம் 112ல் குறிப்பிடப்பட்டுள்ளது. சீதை பாதாளம் புகுந்த பின் வேறு எந்தப் பெண்ணையும் விவாகம் செய்து கொள்ளாத ராமர் அஸ்வமேதம், வாஜபேயம், அக்னிசோமம் உள்ளிட்ட பல்வேறு யாகங்களையும் சீதாவின் உருவத்தை ஒத்த தங்கப் பதுமையைக் கொண்டு செய்து முடித்ததைப் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே ராமர் பல பெண்களை மணந்தார் என்பதும் அவர் ஏக பத்தினி விரதன் அல்ல என்ற பொய்யும் வீடியோவை வெளியிட்ட 'மாற்றம் மகேஷ்' குறிப்பிட்ட அதே வால்மீகி இராமாயணத்தின் கூற்றுப்படி தவிடுபொடியாகிறது.
பகுத்தறிவு என்ற பெயரில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதாக கிளம்பி இருக்கும் இத்தகைய ஆட்கள், இவர்கள் என்ன தேடியா பார்க்கப் போகிறார்கள் என்ற தைரியத்தில் இதிகாசங்களிலும் புராணங்களிலும் இல்லாததை எல்லாம் காதல் நாவல்களில் வருவது போன்ற காட்சிகளால் இட்டுக் கட்டி கூறிவிட்டு அதற்கான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் போது மீசையும் தாடியும் மழித்து வேறு மாநிலத்துக்குச் சென்று அஞ்சி, ஓடி ஒளிகின்றனர். இந்த பயந்தாங்கொள்ளி பொய்யர்கள் பேச்சுரிமைக் காவலர்கள் என்று போற்றப்படுவது தான் இன்றைய தமிழகத்தின் அவலம்.
https://www.valmikiramayan.net/utf8/ayodhya/sarga8/ayodhya_8_frame.htm
http://iereadingguides.blogspot.com/2015/05/book-mn-dutt-ramayana-uttara-kanda.html?m=1