இந்நிலையில், லோக்சபா தேர்தல் கூட்டணி வேலைகளை, தி.மு.க.,தான் முதலில் துவக்கியது. அறிவாலயத்தில் கருணாநிதி சிலை திறப்பு விழாவை வைத்து என்றைக்கு சோனியா, இராகுல் காந்தியை வரவழைத்து திறந்தார்களோ அன்றைக்கே அவர்கள் கூட்டணிக்கான அஸ்திவாரத்தை அமைத்துக் கொண்டார்கள் எனலாம். அப்போது, அ.தி.மு.க., அமைதியாக இருந்தது.
அக்கட்சிஇலிருந்து வெளியேறிய சிலர் தினகரன் அணியாக பிளவுபட்டிருந்த நிலையில் அதிகவை வலிமை குறைந்த கட்சியாகவும் திமுகவை பலம் பொருந்திய கட்சி போலவும் பத்திரிகைகள் மற்றும் ஊடகக் கணிப்புகள் வருணித்து வந்தன. அதிமுகவை யாரும் சீண்டபோவதில்லை என, எதிர்க்கட்சியினர் எண்ணியிருந்த நிலையில், ஒரே நாளில், பா.ம.க., - பா.ஜ., கட்சிகள், அ.தி.மு.க., கூட்டணியில் இணைந்தன.
தற்போது, அ.தி.மு.க., தலைமையில், வலுவான கூட்டணி அமைந்துள்ளதால், சுலப வெற்றி என்ற, தி.மு.க., வின் கனவு தகர்ந்துள்ளது. லோக்சபா தேர்தலுக்கு மட்டுமின்றி, 21 சட்டசபை தொகுதிகள் இடைத் தேர்தலிலும், அ.தி.மு.க., வேட்பாளர்களை ஆதரிக்க, பா.ம.க., - பா.ஜ., கட்சிகள் முன்வந்து உள்ளன.
இதனால், 21தொகுதிகளையும் மொத்தமாக கைப்பற்றி, தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தலாம் என்ற, தி.மு.க.,வின், ஆட்சி கணக்கும் கேள்விக்குறியாகி உள்ளது.
லோக்சபா தேர்தலிலும், சட்டசபை இடைத்தேர்தலிலும், அ.தி.மு.க., கூட்டணியை வெல்வது, அவ்வளவு எளிதல்ல என்ற எண்ணம், தற்போது, தி.மு.க., வினரிடம் ஏற்பட்டுள்ளது.
இதற்கு, கடந்த தேர்தல்களில், பா.ஜ., - பா.ம.க., கட்சிகள், கணிசமான ஓட்டுகளை வாங்கி உள்ளதே காரணம்.கடந்த, 2016 சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., - பா.ம.க., - பா.ஜ., ஆகிய கட்சிகள், தனித்து போட்டி யிட்டன.
தி.மு.க., கூட்டணியில், காங்கிரஸ், முஸ்லிம் லீக் கட்சிகள் இருந்தன.மக்கள் நலக் கூட்டணியில், மார்க்சிஸ்ட், இந்திய, கம்யூ., - ம.தி.மு.க., - தே.மு.தி.க., மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் இருந்தன.
தனித்து போட்டியிட்ட, அ.தி.மு.க., 40.8 சதவீத ஓட்டுகளை பெற்று, ஆட்சியை தக்கவைத்தது. பா.ம.க., 5.3 சதவீதம்; பா.ஜ., 2.9 சதவீதம் ஓட்டுகளை பெற்றன. தி.மு.க., 31.5 சதவீதம்; கூட்டணி கட்சியான, காங்., 6.5 சதவீதம் ஓட்டுகளை பெற்றன.தற்போது, பா.ம.க., - பா.ஜ., ஓட்டுகள், அ.தி.மு.க.,வுடன் சேருவதால், அதன் ஓட்டு சதவீதம் உயர்வதுடன், லோக்சபா தேர்தலில் வெற்றி வாய்ப்பும் பிரகாசமாகி உள்ளது.
அதேபோல, இடைத்தேர்தல் நடக்க உள்ள, 21 சட்டசபை தொகுதிகளில், பூந்தமல்லி, திருப்போரூர், பாப்பிரெட்டிபட்டி, அரூர், சோளிங்கர் தொகுதிகளில், ஏற்கனவே அதிக ஓட்டுகளை பெற்ற கட்சியாக, பா.ம.க., உள்ளது.
இது, இடைத்தேர்த லில், அ.தி.மு.க., வெற்றிக்கு பெருமளவில் கை கொடுக்கும். ஏனெனில், 2016 தேர்தலில், தனித்து போட்டியிட்ட, பா.ம.க., பூந்தமல்லியில், 15 ஆயிரத்து, 287; திருப்போரூரில், 28 ஆயிரத்து, 125; பாப்பிரெட்டிபட்டியில்,61 ஆயிரத்து, 521; அரூரில், 27 ஆயிரத்து, 747; சோளிங்கரில், 50 ஆயிரத்து, 827 ஓட்டு களை பெற்று உள்ளது.ஓசூர் தொகுதியில், பா.ஜ., 28 ஆயிரத்து, 850 ஓட்டுகளை பெற்றது.
எனவே, பெரிய அளவில் அதிருப்தி அலை வீசினால் மட்டுமே, இடைத்தேர்தல் வெற்றியை, அ.தி.மு.க., இழக்க நேரிடும். அதற்கான வாய்ப்பு குறைவாகவே உள்ளது.அதேபோல், 2014 லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., தனித்து போட்டியிட்டு, 37 தொகுதிகளை வென்றது.
பா.ஜ., தலைமையில், பா.ம.க., - தே.மு.தி.க., - ம.தி.மு.க., போன்ற கட்சிகள் இணைந்து போட்டியிட்டன. இதில், இரண்டு தொகுதிகளை வென்ற, பா.ம.க., - பா.ஜ., ஆகியவை, தற்போது, அ.தி.மு.க., கூட்டணிக்கு வந்து விட்டன; தே.மு.தி.க.,வும் வரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
அந்த தேர்தலில், அ.தி.மு.க., பெற்ற ஓட்டுகளுக்கும், தி.மு.க., கூட்டணி பெற்ற ஓட்டுகளுக்கும் இடையே, மிகப்பெரிய வித்தியாசம் உள்ளது.
தினகரன் கட்சியால் ஏற்படும் பாதிப்பு, ஆட்சி மீதுள்ள அதிருப்தி போன்ற விஷயங்களால், குறிப்பிட்ட சதவீத ஓட்டுகள் குறைந்தாலும், பல தொகுதிகளில், அ.தி.மு.க., கூட்டணி பலமாகவே உள்ளதை, புள்ளி விபரங்கள் உணர்த்துகின்றன.
அதுமட்டுமல்லாமல் பாஜக அறிவித்து செயல்படுத்திவரும் பொது பிரிவினருக்கான 10 சதவீத ஒதுக்கீடும் அரசியலுக்கு அப்பாற்பட்டு சமூக ரீதியான வாக்குகளை அதிமுக கூட்டணிக்கு பரவலாக பெற்றுத்தரும் வாய்ப்பும் உள்ளது.
மேலும் அகில இந்திய அளவில் பிரதமர் மோடிக்கு இணையான திறமையானவர்கள் இல்லை என்பதை அனைவரும் ஒப்புக்கொள்கின்றனர்.
மீண்டும் அவருக்கு வாய்ப்பு அளிப்பதே சிறந்தது என பொதுவாக அனைத்து தரப்பு மக்களும் ஒப்புக் கொள்வதால் மீண்டும் பாஜகவே மத்தியில் வரும் என்ற கருத்து நாட்டுமக்களிடையே வலுவடைந்து வருகிறது.
அதிமுகவினரும் தமிழகத்துக்கான தனி விருப்பங்களை விட்டுக் கொடுக்காமலும், அதேவ் சமயம் பாஜகவுடன் இணக்கத்தன்மையை கடைபிடிப்பதால் இந்த கூட்டணியால் நாடும், மாநிலமும் அதிக பலன்களைப் பெரும் என்ற நம்பிக்கை வளர்ந்து வருகிறது.
இதனால்தான் 40 தொகுதிகளிலும், சுலப வெற்றியை எதிர்பார்த்த, தி.மு.க., கலக்கம் அடைந்துள்ளது எனவும், ஓட்டு வங்கி கணக்கு மாறுவதால், 21 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலிலும், தி.மு.க.,வுக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதனால் திமுக- காங் வட்டாரங்கள் கலங்கி இருப்பதாகவும், இந்த கலக்கத்தினால்தான் தங்களால் எப்போதும் செய்ய முடியாத கல்விக்கடன் தள்ளுபடி, ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து, போலி விவசாயக் கடன்தள்ளுபடி திட்டங்களை அந்த கட்சிகள் மனம் போன போக்கில் அறிவித்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்த கலக்கத்தைதான், தி.மு.க., - காங்., கூட்டணி தலைவர்கள், தங்கள் பேச்சிலும், பேட்டியிலும் காட்டி வருவதாக தினமலர் நாளேடு கூறியுள்ளது.