நீதிமன்றத்திடம் மண்டியிட்ட மதபோதகர்- மத வெறுப்பை பரப்பக்கூடாது என நீதிபதிகள் எச்சரிக்கை.!

கோவில்கள் சாத்தானின் கோட்டை என்று பேசிய லசாரசுக்கு நீதிமன்றம் எச்சரிக்கை

Update: 2021-02-05 20:02 GMT

இந்துக்கள் மற்றும் இந்து மதம் குறித்த மத போதகர் மோகன் லசாரசின் இழிவான பேச்சுக்கு நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்து கடவுள்களை சாத்தான் என்றும் கோவில்களை சாத்தான்களின் கோட்டை என்றும் இழிவுபடுத்தி பேசிய மத போதகர் மோகன் லசாரஸ் மீது புகார் அளிக்கப்பட்டு இருந்தது. இந்த புகாரின் அடிப்படையில் தொடுக்கப்பட்ட வழக்கில் லசாரஸ் மன்னிப்பு கேட்ட நிலையில், நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்தியாவில் எங்கும் இல்லாத அளவு தமிழகத்தில் தான் சாத்தான்களின் கோட்டை எங்கும் நிறைந்துள்ளது என்று ஒரு சுவிசேஷக் கூட்டத்தில் லசாரஸ் பேசிய வீடியோ சமூக ஊடகங்களில் வைரலான நிலையில், மத வெறுப்பைப் பரப்புவதாக அவர் மீது புகார் அளிக்கப்பட்டது. இதன் பேரில் முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்யப்பட்டது.

 

இந்த வழக்கு விசாரணைக்கு வந்ததை அடுத்து புகார்களைத் தள்ளுபடி செய்த நீதிமன்றம், ஒரு குறிப்பிட்ட மதத்துக்கு எதிராக வெறுப்பைப் பரப்புவதும், பிற மதத்தினர் இடையே அந்த மதத்தின் மீது வெறுப்பை உண்டாக்குவதும் மதம் என்ற ஒன்றின் நோக்கத்தையே கெடுப்பதாக விமர்சித்தனர். மதத் தலைவர்கள், போதகர்கள் அவர்களது மதத்தைப் பரப்பும் போது பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தியது.

"மதத்தின் நோக்கமே மனிதர்களை மேம்படுத்துவது தான். ஆனால் பல சமயங்களில் மனிதர்கள் தங்களது மதத்தின் மீது கண்மூடித்தனமான பற்றுக் கொண்டு பிற மதங்களை இழிவுபடுத்தி பேசுகிறார்கள். ஆன்மீகம் என்பது எந்த மதம் உயர்ந்தது என்று நிரூபிக்க மதங்கள் ஒன்றுக்கொன்று போட்டி போடுவதற்காக அல்ல" என்று வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கில் மோகன் லசாரஸ் தனது செயலுக்கு ஆழ்ந்த வருத்தம் தெரிவிப்பதாக நீதிமன்றத்தில் கூறி இருந்தார். மேலும், தனது அறிக்கையில், 'இந்துக் கடவுள்களையோ கோவில்களையோ அல்லது வேறு எந்த மதத்தையோ புண்படுத்துவதோ புனிதத் தன்மையை இழிவுபடுத்துவதோ தனது நோக்கம் அல்ல' என்று குறிப்பிட்டிருந்தார். வருங்காலத்தில் இது போன்று மீண்டும் நடக்காமல் இருக்குமாறு தான் பார்த்துக் கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நீதிமன்றம் இந்து மதத்தையும்‌ கடவுள்களையும் இழிவாகப் பேசிய லசாரசை நீதிமன்றம் கண்டித்த போதும் அவர் 'வருத்தம்' மட்டுமே தெரிவித்துள்ளார் என்பதும் 'மன்னிப்பு' கேட்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Similar News