குடிமகனாக களமிறங்கிய பிரதமர் மோடி - சற்று முன் ஜனநாயக கடமையாற்றினார்..!

குடிமகனாக களமிறங்கிய பிரதமர் மோடி - சற்று முன் ஜனநாயக கடமையாற்றினார்..!

Update: 2019-04-23 04:06 GMT

குஜராத் மாநிலம் காந்தி நகர் தொகுதியில் பிரதமர் மோடி வாக்களித்து தமது ஜனநாயகக் கடமையை ஆற்றினார்.


குஜராத் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இன்று மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பிரதமர் மோடிக்கு குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் வாக்கு உள்ளது. இதையொட்டி, தமது வாக்கை பதிவு செய்வதற்காக பிரதமர் மோடி இன்று அதிகாலை குஜராத் வந்தடைந்தார்.


விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்த அவர், காந்தி நகரில் உள்ள தமது தாயார் ஹீராபென்னை சந்தித்து ஆசி பெற்றார்.


தாயாரைப் பார்த்துவிட்டு வெளியே வந்த மோடியை வாழ்த்தி ஏராளமானோர் முழக்கமிட்டனர். அப்பகுதியில் இருந்த மக்கள் பிரதமர் மோடியுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.


பின்னர், அங்கிருந்து பலத்த பாதுகாப்புக்கு இடையே அகமதாபாத்தில் உள்ள வாக்குச்சாவடிக்கு மோடி வந்தார். அவரை காந்தி நகர் தொகுதி பா.ஜ.க. வேட்பாளரும், கட்சித் தலைவருமான அமீத்ஷா உள்ளிட்டோர் வரவேற்றனர்.


இதனைத் தொடர்ந்து, வாக்குச்சாவடிக்கு சென்ற மோடி தமது வாக்கைப் பதிவு செய்தார்.


வாக்குச்சாவடியில் இருந்து வெளியே வந்த மோடியைப் பார்த்து அங்கிருந்த மக்கள் உற்சாகத்துடன் முழக்கமிட்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மோடி, தாம் ஜனநாயகக் கடமையை ஆற்றியதாகத் தெரிவித்தார். வெடிகுண்டுகளை விட வாக்காளர் அட்டை வலிமையானது என்று தெரிவித்த மோடி, நல்ல எதிர்காலத்தை தேர்வுசெய்ய அனைவரும் வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டார்.


Similar News