எவ்வளவு நல்லது செய்தாலும் அன்று காமராஜர் இன்று பொன்னார்! மக்களுக்காக உழைத்தவர்கள் ஏன் தோற்கடிக்கப்பட்டார்கள்?
எவ்வளவு நல்லது செய்தாலும் அன்று காமராஜர் இன்று பொன்னார்! மக்களுக்காக உழைத்தவர்கள் ஏன் தோற்கடிக்கப்பட்டார்கள்?
அன்று(1967– இல்) நல்லது செய்த காமராஜரை தோற்கடித்தனர். இன்று கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் ரூ.40 ஆயிரம் கோடிக்கு மேல், நல திட்டங்களை கொண்டுவந்த பொன் இராதாகிருஷ்ணனை தோற்கடித்துள்ளனர். வெற்றி பெற்றது வசந்தகுமார் அல்ல, கிறிஸ்தவ மதமா என்ற கேள்வி மக்களிடையே எழுந்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் தான், கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி. இந்த மாவட்டம் புறக்கணிக்கப்பட்ட மாவட்டம் என்று சொன்னால் அது மிகச் சரியாக இருக்கும். உதாரணமாக இந்த மாவட்டத்தில் உள்ள சாலைகள் சீர் கெட்டு, குண்டும் குழியுமாக தான் கடந்த பல ஆண்டுகளாக கிடந்தன. ஆறு சட்டமன்றத் உறுப்பினர்கள் இந்த மாவட்டத்தில் இருந்தும் ஒரு பிடி மண்ணைக்கூட அள்ளி போடவில்லை. இது தான் உண்மை நிலவரம்.
சாலைகளுக்கு இந்த நிலை என்றால் மற்ற அடிப்படை வசதிகள் பற்றி கேட்கவே வேண்டாம். யார் செய்த புண்ணியமோ கடந்த 2014 பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க சார்பில் போட்டியிட்ட பொன் இராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றார். அதன்பிறகு தான், இந்த குமரி மாவட்டத்திற்கு விமோசனம் கிடைத்தது. அவர் தனக்கு கிடைத்த சந்தர்ப்பத்தை முழுமையாக பயன்படுத்தி இந்த மாவட்டத்திற்கு நல்லது செய்துள்ளார்.
இந்த மாவட்டத்தில் உள்ள 144 மாநில சாலைகனை, ரூ.4,000 கோடி மத்திய அரசின் நிதியை கொண்டு செப்பனிட்டுள்ளார். மதுரையிலிருந்து திருவனந்தபுரம் வரை, இரட்டை ரயில் பாதை திட்டத்தை கொண்டு வந்துள்ளார். இந்த ரயில்வே பாதை அமைக்கும் பணியில் மாநில அரசின் நிதி பங்களிப்பு வேண்டும். ஆனால், தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்ய இயலாது என்று கைவிரித்த நிலையில், அந்த நிதியை மத்திய அரசின் நிதியில் இருந்து ஒதுங்கீடு செய்து செயல்படுத்தினார். களியக்காவிளையில் இருந்து திருவனந்தபுரம் வரை கேரள மாநிலத்தை சார்ந்த பகுதி. கேரளப்பகுதியில் கேரள முதல்வர் பிணராயி விஜயன் அரசாங்கம் நிதி ஒதுக்க இயலாது என்று முட்டுக்கட்டைப்போட்டது. பொன் இராதாகிருஷ்ணன் முயற்சியால் அதற்கும் மத்திய அரசு நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்து செயல்படுத்தி உள்ளார்.
இதுபோல நரிக்குளம் பாலம், சுசீந்திரம் பாலம், பார்வதிபுரம் மேம்பாலம், மார்த்தாண்டம் மேம்பாலம் போன்றவை அவருடைய காலத்திற்குப் பிறகும் அவருடைய பெயரை சொல்லிக்கொண்டே நிற்கும். கன்னியாகுமரியில் இருந்து திருவனந்தபுரம் வரை நாற்கர சாலை, காவல்கிணற்றில் இருந்து நாகர்கோவில்வரை நாற்கர சாலை இவையெல்லாம் எந்த ஒரு எம்பியாலும் எந்தகாலத்திலும் செயல்படுத்த முடியாதவை. இதுபோல ஏராளமான சிறு குறு பாலங்கள், சாலைகளை, கடந்த 5 ஆண்டுகளில் பொன் இராதாகிருஷ்ணன் அமைத்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கிராமங்களின் சந்திப்பில் உள்ள உயர்கோபுர விளக்குகள் 90 சதவீதத்திற்கு மேல், பொன்.இராதாகிருஷ்ணனால் அமைக்கப்பட்டவைதான்.