நடிகர் ரஜினிகாந்த் அரசியலை விட்டு விலகியுள்ளார்.. ரசிகர்களுக்கு உருக்கமான கோரிக்கை.!
நடிகர் ரஜினிகாந்த் அரசியலை விட்டு விலகியுள்ளார்.. ரசிகர்களுக்கு உருக்கமான கோரிக்கை.!
நடிகர் ரஜினிகாந்த் தமிழக அரசியலில் திருப்பு முனையை ஏற்படுத்துவார் என்று அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தனர். இந்நிலையில், தனது உடல்நிலையை கருத்தில் கொண்டு அரசியலில் விலகுவதாக அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக 3 பக்க அறிக்கையும் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். என்னை வாழவைக்கும் தெய்வங்களான தமிழக மக்களுக்கு எனது அன்பான வணக்கம், ஜனவரியில் கட்சி தொடங்குவேன் என்று அறிவித்து மருத்துவர்களின் அறிவுரையையும், மீறி ‘அண்ணாத்த’ படப்பிடிப்பில் கலந்து கொள்ள ஐதராபாத் சென்றேன் கிட்டத்தட்ட 120 பேர் கொண்ட படக்குழுவினருக்கு தினமும், கொரோனா பரிசோதனை செய்து ஒவ்வொருவரையும் தனிமைப்படுத்தி, முகக்கவசம் அணிவித்து மிகவும் ஜாக்கிரதையாக படப்பிடிப்பை நடத்தி வந்தோம்.
இவ்வளவு கட்டுப்பாட்டோடு இருந்தும் 4 பேருக்கு கொரோனா இருக்கிறது என்று தெரிய வந்தது. உடனே இயக்குநர் படப்பிடிப்பை நிறுத்தி எனக்கு உட்பட அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தினார்.
அதில் எனக்க கொரோனா நெகட்டிவ் வந்தது. ஆனால் எனக்கு இரத்தக் கொதிப்பில் அதிக ஏற்றத்தாழ்வு இருந்தது. மருத்துவ ரீதியாக எக்காரணத்தைக் கொண்டும் எனக்கு இரத்தக் கொதிப்பில் தொடர்ந்து ஏற்றக் தாழ்வு இருக்கக்கூடாது, அது என்னுடைய சிறுநீரகத்தை கடுமையாக பாதிக்கும். ஆகையால் என்னுடைய மருத்தவர்களின் அறிவுரைப்படி அவர்களின் மேற்பார்வையில் 3 நாட்கள் மருத்துவமனையில் கண்காணிப்பில் இருக்க நேரிட்டது.
என் உடல்நிலை கருதி தயாரிப்பாளர் திரு.கலாநிதி மாறன் அவர்கள் மீதமுள்ள படப்பிடிப்பை ஒத்திவைத்தார். இதனால் பல பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு, பல கோடி ரூபாய் நஷ்டம் இவை அனைத்திற்கும் காரணம் என்னுடைய உடல் நலம் தான்.
இதை ஆண்டவன் எனக்கு கொடுத்த ஒரு எச்சரிக்கையாகத்தான் பார்க்கிறேன். நான் கட்சி ஆரம்பித்த பிறகு ஊடகங்கள், சமூக வலைதளங்கள் மூலமாக மட்டும் பிரச்சாரம் செய்தால் மக்கள் மத்தியில் நான் நினைக்கும் அரசியல் எழுச்சியை உண்டாக்கி தேர்தலில் பெரிய வெற்றியை பெற முடியாது. இந்த யதார்த்தத்தை அரசியல் அனுபவம் வாய்ந்த யாரும் மறுக்கமாட்டார்கள். நான் மக்களை சந்தித்து கூட்டங்களை கூட்டி, பிரச்சாரத்திற்கு சென்று ஆயிரக்கணக்கான ஏன் லட்சக்கணக்கான மக்களை சந்திக்க வேண்டியிருக்கும்.