பீகார்: காங்கிரஸ் அலுவலகத்தில் கோஷ்டிக் கைகலப்பு! நாற்காலிகளை வீசும் தொண்டர்கள்!

பீகார்: காங்கிரஸ் அலுவலகத்தில் கோஷ்டிக் கைகலப்பு! நாற்காலிகளை வீசும் தொண்டர்கள்!

Update: 2021-01-13 07:30 GMT

பிஹார் தலைநகர் பாட்னாவில் உள்ள சதகந் ஆசிரமத்தில் காங்கிரஸ் தொண்டர்களிடையே இன்று மோதல் ஏற்பட்டது. புதிதாக நியமிக்கப்பட்ட பீஹார் காங்கிரஸின் பொறுப்பாளர் பக்த சரண் தாஸ் முன்னிலையில் காங்கிரஸ் தொண்டர்கள் ஒருவர் மீது ஒருவர் நாற்காலிகளை வீசி கொண்டனர். மாறி மாறி அடித்துக் கொண்டும், குத்திக்கொண்டும் தகராறு செய்தனர்.

 நடந்து முடிந்த பீகார் சட்டசபை தேர்தலில் காசுக்காக சீட்டுகள் விற்கப்பட்டதாகவும், அதனால்தான் காங்கிரஸ் மிக மோசமாக செயல்பட்டதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினர். 

செவ்வாய்க்கிழமை அன்று பீகார் காங்கிரஸின் பொறுப்பாளர் சக்திசின் கோகிலை பதவியில் இருந்து விடுவித்த காங்கிரஸ், புதிதாக பக்த சரண் தாஸை நியமித்தது.

 மூன்று வருடங்களாக பதவியிலிருந்த கோஹில், மேலிடத்தில் தன்னை பதவியை விட்டு அனுப்புமாறு கேட்டுக் கொண்டார். இதைத் தொடர்ந்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பக்த சரண் தாஸை பீகார் காங்கிரஸிற்கு பொறுப்பாக உடனடியாக நினைத்தார். அவர் ஏற்கனவே மிசோரம் மற்றும் மணிப்பூரில் காங்கிரஸ் பொறுப்பில் இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே டெல்லி பொறுப்பாளராக இருக்கும் கோஹில் அதை தொடர்வார். 

Image Courtesy/ Republic News

ஏற்கனவே வெற்றி பெற்ற 19 எம்எல்ஏக்களில் சட்டமன்றத்திற்கு யாரை தலைவராக தேர்ந்து எடுப்பது என்பது குறித்து இதே போன்று ஒரு மோதல் ஏற்பட்டது.

பொதுவாகவே காங்கிரஸ் கட்சியில் கோஷ்டி பூசல் எல்லா மாநிலங்களுக்கும் பொதுவானதாக உள்ளது. சமீபத்தில் கூட ராஜஸ்தானின் சச்சின் பைலட் - அசோக் கெலாட் பிரச்சினை சுமூகமாக முடிந்தாலும், மத்திய பிரதேசத்தில் ஜோதிராதித்ய சிந்தியாவிற்கும் கமல் நாத்திற்கும் முடியவில்லை. இது உயர் மட்டத்தில். கீழ்மட்டத்தில் இன்னுமே அதிகமாக இருக்கும். நம்மூர் சத்தியமூர்த்தி பவனில் நடந்த சண்டைகள் நம் நினைவிற்கு வரலாம். 

பீகாரில் சமீபத்தில் வெளியான தேர்தல் முடிவுகளில் RJD தலைமையிலான மகாகத்பந்தன் (MGB) தோல்வியடைந்தது. இதற்கு முக்கிய காரணமாக கூட்டணியில் இருந்த காங்கிரஸ் மற்ற கட்சிகளை போல் வெற்றி பெறாததே காரணம் என குற்றம் சாட்டப்பட்டது. 70 இடங்களில் போட்டியிட்டு வெறும் 19 இடங்களை மட்டுமே காங்கிரஸ் வென்றுள்ளது. பீகார் தேர்தல் முடிவுகளுக்கு காங்கிரஸே காரணம் என காங்கிரஸ் பொதுச்செயலாளர் தாரிக் அன்வர் கூட ஒப்புக்கொண்டார்.

இது கடந்த முறை 2015 இல் 41 இடங்களில் போட்டியிட்டு 27 வெற்றி பெற்றதை விட மிகவும் குறைவாகும். இந்நிலையில் தோல்வியின் காரணங்கள் குறித்து ஆராய பாட்னாவில் அக்கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற கட்சி எம்எல்ஏக்களும், சட்டீஸ்கர் மாநில முதல்வர் பூபேந்தார் செகாலும் கலந்து கொண்டனர்.

 ஆனால் சிறிது நேரத்திலேயே அங்கு பிரச்சனை உருவானது. காங்கிரஸ் எம்எல்ஏ விஜய் சங்கர் துபெ மற்றும் மற்றொரு எம்எல்ஏ சித்தார்த் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் பெரும் சலசலப்புக்கு காரணமானதாக ANI செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

 யார் காங்கிரஸ் சட்டமன்ற கட்சியின் தலைவராக வேண்டும் என்ற விவகாரத்தில் தான் சண்டையே ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

 இது குறித்து பீகார் காங்கிரஸ் தலைவர் மதன் ஜா கூறுகையில், இது குறித்து தனக்கு தெரியாது என்றும் இவ்விவகாரத்தை கவனத்தில் எடுத்துக் கொள்வதாகவும் தெரிவித்தார். மேலும் இரண்டு எம்எல்ஏக்கள் கூட்டத்திற்கு வரவில்லை என்பது குறித்தும் அவர் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. ஒருவருக்கு உடல்நிலை சரியில்லை என்றும், மற்றொருவர் நேற்றுதான் தங்களை சந்தித்ததாகவும் கூறினார்.

Similar News