செட்டப் செல்லப்பாவான தி.மு.க பிரமுகர்! துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பிற்கு ஆசைப்பட்டு மாட்டி விட்ட கெட்டப்!

செட்டப் செல்லப்பாவான தி.மு.க பிரமுகர்! துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பிற்கு ஆசைப்பட்டு மாட்டி விட்ட கெட்டப்!

Update: 2021-01-10 07:00 GMT

திருவள்ளூர் மாவட்டத்தில் திமுக பிரமுகர் தாக்கப்பட்ட விவகாரத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பிற்கு ஆசைப்பட்டு, கூலிப்படையை ஏவி கொலை வெறித் தாக்குதல் நடத்தும்படி திமுக பிரமுகர் ஆடிய நாடகம் அம்பலமாகியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் தெற்கு ஒன்றிய திமுகச் செயலாளர் கருணாகரனின் சகோதரர் கண்ணன். திமுக பிரமுகரான இவர், கடந்த டிசம்பர் 27 -ம் தேதி தனது காரில் திருநிலை கிராமத்தில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

நெடுஞ்சாலையில், கன்னிகைப்பேர் ஏரிக் கரை வளைவு அருகே, இரண்டு இரு சக்கர வாகனங்களில் வந்த மர்ம நபர்கள் திடீரென வழிமறித்து கார் கண்ணாடிகளை பட்டாக் கத்தியால் உடைக்கத் தொடங்கினர்.

காரில் வந்த கண்ணனும் ஓட்டுநர் மணியும் இறங்கி தப்பியோடினர். இந்த சம்பவம் குறித்து கண்ணன், பெரியபாளையம் காவல்நிலையத்தில் புகாரளித்தார். போலீசார் சம்பவம் நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், 5 பேரை கைது செய்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில் கண்ணனின் காரைத் தாக்கச் சொன்னது வழக்கறிஞர் ராஜா என்பது தெரியவந்தது. ராஜாவைப் பிடித்து விசாரித்தபோது அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகின.

துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புக்கு ஆசைப்பட்டு, கண்ணனே ரவுடிகளை செட்டப் செய்து தாக்கியது தெரியவந்தது. இதனையடுத்து, திமுக பிரமுகர் கண்ணன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரையும் கைது செய்துள்ளனர்.

கண்ணன் தனக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வேண்டும் என ஆசைப்பட்டுள்ளார். அதற்கு என்ன செய்ய வேண்டும் என வழக்கறிஞர் ராஜாவை அணுகிக் கேட்டபோது, அவர் தான் இந்தத் தாக்குதல் ஐடியாவைக் கூறியுள்ளார் என்பதும், அவரே கூலிப்படையை செட்டப் செய்தார் என்பதும் தெரியவந்துள்ளது.

இதையடுத்து வழக்கறிஞர் ராஜாவையும் போலீசார் கைது செய்தனர். துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பிற்கு ஆசைப்பட்ட திமுக பிரமுகர், வழக்கறிஞரின் ஆலோசனையின் பேரில் தனது காரை கூலிப்படை ஆட்களை வைத்து அடித்து நொறுக்கிய நாடகம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Similar News