"திருமாவளவன் இந்து பெண்களின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வேண்டும்" - கரூரில் இந்துப் பெண்கள் கொந்தளிப்பு!
"திருமாவளவன் இந்து பெண்களின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வேண்டும்" - கரூரில் இந்துப் பெண்கள் கொந்தளிப்பு!
தமிழகத்தில் பா.ஜ.க இதுவரை எத்தனையோ ஆர்பாட்டங்கள், போராட்டங்கள், ஊர்வலங்கள், கூட்டங்கள், தெருமுனைப் பிரச்சாரங்கள் என ஏராளமான நிகழ்வுகளை செய்துள்ளது. என்றாலும் நேற்று திருமாவளவனின் பெண்கள் இழிவு பேச்சை கண்டித்து தமிழகம் முழுவதுமுள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பாக பாஜக மகளிர் மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் திருமாவளவனை எதிர்த்து ஆவேசமாக திரண்டது முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும்.
"கட்சி எங்கே தமிழகத்தில் உள்ளதா? அந்த கட்சிக்கு தொண்டர்கள் உள்ளார்களா?" என கேலி செய்தவர்களுக்கு பதிலடி தரும் விதத்தில் எங்கள் கட்சியில் ஏராளமான பெண்கள் இருக்கிறார்கள், அவர்கள் சாதாரண பெண்கள் அல்ல, பாரதி கண்ட புதுமைப் பெண்கள் என்பதை நிரூபிக்கும் வகையில் இந்த மகளிர் போராட்டம் எழுச்சிமிக்க ஒன்றாக இருந்ததாக அரசியல் பார்வையாளர்கள் கூறியுள்ளனர்.
இந்நிலையில் கரூர் தபால் தந்தி அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட பாஜக மகளிரணி தலைவி ஜெயலட்சுமி தலைமை வகித்தார். மாநில மகளிரணி துணைத்தலைவர் மீனா, கரூர் மாவட்ட பா.ஜ.க தலைவர் சிவசாமி உட்பட அனைத்து நிர்வாகிகளும் கலந்துக் கொண்டதோடு, 200க்கும் மேற்பட்ட கட்சியினர் திரளாக இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
பா.ஜ.க மாநில மகளிரணி துணை தலைவர் மீனா வினோத்குமார் ஆர்பாட்டத்திற்கு பின்பு செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசியதாவது:- இந்துக்களை வைத்து அரசியல் செய்து வரும் விடுதலை சிறுத்தைகள் கட்சிகளின் தலைவர் திருமாவளவன், பெண்கள் என்ன கிள்ளுக்கீரைகளா? இந்துக்கள் என்றால் கேவலமானவர்களா ? முதலில் இந்துக்களின் கோயில்களையும் பின்பு இந்துக்களின் சாதிகளையும் கேவலமாக பேசி வந்தீர்கள். இந்துக்களுக்கு எதிரான கருத்துக்களை தொடர்ந்து பேசி வருகின்றீர்கள்.