"திருமாவளவன் இந்து பெண்களின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வேண்டும்" - கரூரில் இந்துப் பெண்கள் கொந்தளிப்பு!

"திருமாவளவன் இந்து பெண்களின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வேண்டும்" - கரூரில் இந்துப் பெண்கள் கொந்தளிப்பு!

Update: 2020-10-28 11:02 GMT

தமிழகத்தில் பா.ஜ.க இதுவரை எத்தனையோ ஆர்பாட்டங்கள், போராட்டங்கள், ஊர்வலங்கள், கூட்டங்கள், தெருமுனைப் பிரச்சாரங்கள் என ஏராளமான நிகழ்வுகளை செய்துள்ளது. என்றாலும் நேற்று திருமாவளவனின் பெண்கள் இழிவு பேச்சை கண்டித்து தமிழகம் முழுவதுமுள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பாக பாஜக மகளிர் மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் திருமாவளவனை எதிர்த்து ஆவேசமாக திரண்டது முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும்.

"கட்சி எங்கே தமிழகத்தில் உள்ளதா? அந்த கட்சிக்கு தொண்டர்கள் உள்ளார்களா?" என கேலி செய்தவர்களுக்கு பதிலடி தரும் விதத்தில் எங்கள் கட்சியில் ஏராளமான பெண்கள் இருக்கிறார்கள், அவர்கள் சாதாரண பெண்கள் அல்ல, பாரதி கண்ட புதுமைப் பெண்கள் என்பதை நிரூபிக்கும் வகையில் இந்த மகளிர் போராட்டம் எழுச்சிமிக்க ஒன்றாக இருந்ததாக அரசியல் பார்வையாளர்கள் கூறியுள்ளனர்.

இந்நிலையில் கரூர் தபால் தந்தி அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட பாஜக மகளிரணி தலைவி ஜெயலட்சுமி தலைமை வகித்தார். மாநில மகளிரணி துணைத்தலைவர் மீனா, கரூர் மாவட்ட பா.ஜ.க தலைவர் சிவசாமி உட்பட அனைத்து நிர்வாகிகளும் கலந்துக் கொண்டதோடு, 200க்கும் மேற்பட்ட கட்சியினர் திரளாக இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். 

பா.ஜ.க மாநில மகளிரணி துணை தலைவர் மீனா வினோத்குமார் ஆர்பாட்டத்திற்கு பின்பு செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசியதாவது:- இந்துக்களை வைத்து அரசியல் செய்து வரும் விடுதலை சிறுத்தைகள் கட்சிகளின் தலைவர் திருமாவளவன், பெண்கள் என்ன கிள்ளுக்கீரைகளா? இந்துக்கள் என்றால் கேவலமானவர்களா ? முதலில் இந்துக்களின் கோயில்களையும் பின்பு இந்துக்களின் சாதிகளையும் கேவலமாக பேசி வந்தீர்கள். இந்துக்களுக்கு எதிரான கருத்துக்களை தொடர்ந்து பேசி வருகின்றீர்கள்.

இந்துக்களை மட்டுமே குறை கூறும் நீங்கள், முஸ்லீம்கள் பற்றியும், கிறிஸ்துவர்கள் பற்றியும் ஏதாவது பேசிப்பாருங்களேன், அப்படி கூறி விட்டு தான் தைரியமாக நடமாட முடியுமா? என்று கூறிய மீனா வினோத்குமார், தொல்.திருமாவளவன் அவர்களே உங்களுக்கு சமஸ்கிருதம் படிக்க தெரியுமா ? சமஸ்கிருதத்தில் உள்ள நூலில் உள்ளவற்றிற்கு அர்த்தம் தெரியுமா?

அப்புறம் எப்படி அந்த நூலில் அந்த அர்த்தம் உள்ளது என்று உங்களுக்கு தெரியும், அந்த நூல் எழுதப்பட்ட ஆண்டு சுமார் 3 ஆயிரத்து 500 ஆண்டுகளுக்கு முன்பு, ஆனால் அதை ஒரு ஆங்கில கிறிஸ்த்துவன் எழுதிய புத்தகத்தினை வைத்து கொண்டு, இந்துக்களை ஒடுக்குவதற்காக, கிறிஸ்த்து ஆங்கிலேயர்கள் நம் மீது திணிக்கப்பட்ட கருத்தினை கையில் வைத்து கொண்டு இந்து பெண்கள் அடிமைப்படுத்தி உள்ளார்கள் என்று ஒரு தவறான விஷயத்தினை மக்களிடம் பரப்பி வருகின்றீர்கள்.

இல்லாத ஒரு விஷயத்தினை இருக்கின்றது என்று கொண்டு வர நினைக்கும் திருமாவளவன், நீங்களும் சரி உங்களது தாயார், அக்கா ஆகிய அனைவரும் இந்துக்களே, ஆனால் உங்களது அரசியல் லாபத்திற்காக நீங்கள் என்ன வேண்டுமானாலும் பேசி விடுவீர்களா? இன்று நீங்கள் ஒரு பாராளுமன்ற உறுப்பினரா இருக்கின்றீர்கள் என்றால், அதற்கு இந்து பெண்கள் தான் காரணம், அவர்கள் உங்களுக்கு ஒட்டு போட்டதால் தான், நீங்கள் இன்று பாராளுமன்ற உறுப்பினர் ஆக உள்ளீர்கள். ஆகவே நீங்கள் ஒவ்வொரு இந்து பெண்ணின் காலில் விழுந்தால் கூட பாவம் தீராது என்றார். அதே போல எத்தனை ஜென்மம் எடுத்தாலும் சரி., இனி இந்து பெண்களின் வாக்கினை வாங்க முடியாது என்றார்.

மேலும், இந்து பெண்களை தெய்வங்களாக வணங்கும் நாட்டில் இந்து பெண்களை கொச்சைபடுத்துவதா ?, நம் பாரதத்தினையே ஒரு பாரத மாதாவாக தான் நாம் நினைத்து வழிபடுகின்றோம். அப்படி பட்ட புனித பூமியில் புனித இந்துக்களை பற்றியும், பெண்களை பற்றியும் கூறியதற்காக பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டுமென்றும்,

அதுவரை உலகில் உள்ள அனைத்து இந்து பெண்களும் ஒன்று திரண்டு பல்வேறு போராட்டங்களை தொல்.திருமாவளவனுக்கு எதிராக நடத்துவோம் என்றார். மேலும் தமிழக அரசு உடனே மத வெறியை தூண்டி அரசியல் லாபம் காணும் திருமாவளவனை கைது செய்ய கோரி பா.ஜ.க சார்பில் கேட்டுக் கொள்கின்றேன் என்றார்.

Similar News