கிளார்க் போன்று காங்கிரசார் நடத்தினார்கள்.. வேதனையில் குமாரசாமி.!

கிளார்க் போன்று காங்கிரசார் நடத்தினார்கள்.. வேதனையில் குமாரசாமி.!

Update: 2020-12-23 08:34 GMT

முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி பெங்களூருவில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது: நான் பா.ஜ.க., அரசு மீது மென்மையான போக்கை பின்பற்றுவதாக கூறுகிறார்கள். நான் பா.ஜ.க., பக்கமும் இல்லை, காங்கிரஸ் பக்கமும் இல்லை. அரசியல் என்பது சக்கர வியூகத்தை போன்றது. அதில் ஒரு முறை மாட்டிக் கொண்டால் அதில் இருந்து வெளியே வருவது கடினம்.

இன்றைய அரசியலில் பணம் மிக முக்கிய பங்காற்றுகிறது. நான் மவுனமாக இருந்து கொண்டு, பா.ஜ.க., அரசின் செயல்பாடுகளை கூர்ந்து கவனித்து வருகிறேன். ஜி.டி.தேவேகவுடா எம்.எல்.ஏ., எங்கள் கட்சியை விட்டு வெளியே சென்றார். நான் வெளிநாடு சென்றதால் கூட்டணி அரசு கவிழ்ந்ததாக அவர் சொல்கிறார். யார்.. யார் ரகசிய கூட்டத்தை நடத்தினார்கள் என்பது எனக்கு தெரியும்.

தேர்தலில் பா.ஜ.க., மற்றும் காங்கிரசுக்கு எதிராக தான் எனது போராட்டம் இருக்கும். கூட்டணி அரசு நீடிப்பதை சித்தராமையா விரும்பவில்லை. அந்த அரசால் அவருக்கு எந்த லாபமும் இல்லை. அதனால் கூட்டணி ஆட்சி கவிழும் என்று அடிக்கடி கூறி வந்தார். இது பற்றி மாநில மக்களுக்கு நன்றாக தெரியும்.

கூட்டணி ஆட்சி கவிழ்ந்ததற்கு நான் காரணம் அல்ல. நான் எந்த தவறும் செய்யவில்லை. சித்தராமையாவே அதற்கு நேரடி காரணம். முதலமைச்சராக இருந்தபோது கண்ணீர் விட்டேன். என்னை ஒரு கிளார்க்கை போல் காங்கிரசார் நடத்தினர். நான் சந்தர்ப்பவாத அரசியல்வாதி அல்ல. சித்தராமையா தான் சந்தர்ப்பவாத அரசியல்வாதி. இவ்வாறு அவர் பேசினார்.

மீண்டும் கர்நாடக அரசியலில் காங்கிரசாருக்கும், குமாரசாமிக்கும் வார்த்தை போர் உருவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News