பேச்சு சுதந்திரம், மனித உரிமைகள் குறித்துப் பேசும் தகுதி கம்யூனிஸ்ட்களுக்கு உள்ளதா?
பேச்சு சுதந்திரம், மனித உரிமைகள் குறித்துப் பேசும் தகுதி கம்யூனிஸ்ட்களுக்கு உள்ளதா?
இந்தியாவில் இடதுசாரிக் கட்சிகள் தங்களை பேச்சுரிமையின் நாயகர்களாக காட்டிக் கொள்கிறார்கள். எதற்கெடுத்தாலும் பாசிச அரசாங்கம், தனியுரிமை, தனிமனித உரிமைகள் என்று பக்கம் பக்கமாக எழுதித் தள்ளுகிறார்கள். ஆனால் கடந்த வாரத்தில் கேரளாவில் ஆளும் இடதுசாரி கம்யூனிஸ்ட் அரசாங்கம் 'விரும்பத்தகாத' கருத்துக்களை வெளிப்படுத்தும் சுதந்திரத்துக்கு எதிராக ஒரு கடுமையான சட்டத்தை கொண்டுவர முயற்சித்தது.
ஆனால் இந்த திருத்தத்திற்கு எதிராக சமூக ஊடகங்களில் மக்கள், சிவில் சமூகம் மற்றும் எதிர்க்கட்சியினரின் வலுவான எதிர்ப்பிற்குப் இந்த சட்டத்தை அமல்படுத்த போவதில்லை என்று திங்கட்கிழமை ஜகா வாங்கியது.
இந்த சட்டத்திற்கு கேரள ஆளுநர் வெள்ளிக்கிழமை அன்று ஒப்புதல் அளித்துக் கையெழுத்திட்டார். இந்த சட்டத்தில் அப்படி என்ன இருந்தது? இந்த சட்டத்தின்படி, எந்த ஊடக வாயிலாகவும் 'அவமானப்படுத்தும்' நோக்கத்திலோ, மிரட்டும் விதமாகவோ அவதூறான கருத்துக்களை எழுதினாலோ பேசினாலோ, கேரள மாநில அரசாங்கத்திற்கு யார் மீதும் வழக்கு போடவும், சிறையில் தள்ளவும் அதிகாரம் இருக்கிறது.
உச்சபட்ச கொடுமையாக இதன் பேரில் குற்றம் சாட்டப்பட்டவர்களாக அறிவிக்கப்பட்டவர்களுக்கு மூன்று வருடங்கள் வரை சிறைத் தண்டனை கிடைக்கலாம். இந்த மசோதா, கேரள போலீஸ் சட்டம் 118 (A) வின் கீழ் ஒரு பிரிவாக அறிமுகப்படுத்தப்பட்டது. சமூக ஊடகங்களின் வாயிலாக செய்யப்படும் குற்றங்களை தடுப்பதற்கு இத்தகைய பிரிவு தேவை என்று இடதுசாரி அரசாங்கம் இதை நியாயப்படுத்தியது.
ஆனால் பேச்சுரிமை ஆர்வலர்கள், சட்ட நிபுணர்கள் மற்றும் மனித உரிமை அமைப்புகள் மற்றும் எதிர்கட்சிகள் எல்லாம் சேர்ந்து இந்த விவாதத்தில் பெரிய ஓட்டை இருப்பதை சுட்டிக் காட்டின. இது முக்கியமாக அரசாங்கத்திற்கு எதிராக கருத்துக்களை வெளியிடும் பதிரிகையாளர்களைத் தாக்க பயன்படும் என்பதை சுட்டிக்காட்டினார்.
ஏன் 118 (A) ஒரு மோசமான யோசனை?
இந்த சட்டத்திற்கு ஆதரவாக, நியாயப்படுத்தி பேசிய கேரள முதல்வர் பினராய் விஜயன், கேரள அரசாங்கத்திற்கு பத்திரிக்கை சுதந்திரத்தையும், தனிமனித உரிமையையும் பாதுகாக்கும் உரிமை இருப்பதாகவும், ஆனால் தனிமனித மரியாதைக்கு ஊறு விளைவிக்கும் வகையில் நடைபெறும் விஷயங்களை தடுக்க வேண்டும் என்றும், அத்தகைய நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக தான் கேரள போலீஸ் சட்டம் கொண்டு வரப் போவதாகவும் கூறினார்.