"எல்லாம் மே மாதம் வரைதான்" - முதல்வரையும், வேலுமணியையும் வம்பிழுக்கும் ஸ்டாலின்!

"எல்லாம் மே மாதம் வரைதான்" - முதல்வரையும், வேலுமணியையும் வம்பிழுக்கும் ஸ்டாலின்!

Update: 2021-01-26 11:55 GMT

"சீப்பை ஒழித்து விட்டால் திருமணம் நின்று விடுமா? எல்லாம் மே மாதம் வரைக்கும் தான்" என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு தி.மு.க தலைவர் ஸ்டாலின் அறிக்கை மூலம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

குடியரசு தினத்தை முன்னிட்டு கிராமங்களில் நடைபெறும் கிராம சபை கூட்டங்களை கொரோனோ தொற்று காரணமாக தமிழக அரசு தவிர்த்திருந்தது. இதனை காரணமாக வைத்து ஆளும் அ.தி.மு.க அரசை கண்டிக்கும் விதமாக தி.மு.க சார்பில் அதன் தலைவர் ஸ்டாலின் ஓர் அறிக்கையை வெளியிட்ள்ளார் அதில், "குடியரசு தினத்தன்று நடைபெற வேண்டிய கிராம சபைக் கூட்டங்களை ரத்து செய்து உள்ளாட்சி ஜனநாயகத்தின் குரல்வளையை மீண்டுமொருமுறை நெறித்திருக்கும் அ.தி.மு.க. அரசுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்

கொரோனா காலத்தில் கட்சிக் கூட்டங்களை நடத்தி பிரச்சாரத்தில் ஈடுபடும் முதலமைச்சர் திரு.பழனிசாமிக்கு கிராம சபைக் கூட்டங்கள் என்றால் கசக்கிறது. திராவிட முன்னேற்றக் கழகம் நடத்திய கிராம சபைக் கூட்டங்களைப் பார்த்து - அதற்கு கூடும் மக்களைப் பார்த்து முதலமைச்சரும், அமைச்சர்களும் மிரண்டு போயிருக்கிறார்கள் என்பதற்கு இதை விட வேறு உதாரணம் தேவையில்லை . - கிராம ராஜ்யத்தின் உயிர்நாடியாகத் திகழும் கிராம சபைக் கூட்டங்களை நடத்துவதற்குக் கூட வக்கற்ற அ.தி.மு.க அரசு - தமிழகத்திற்கு ஏற்பட்ட மிகப்பெரிய சாபக்கேடு.

இந்தத் தடை வருகின்ற மே மாதம் வரைதான்! திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி அமைந்தவுடன் தமிழகமெங்கும் உள்ள ஊராட்சிகளில் கிராம சபைக்கூட்டங்கள் நடக்கத்தான் போகிறது. அதில் மக்கள் நலத்திட்டங்கள் பற்றிய விவாதமும் - அ.தி.மு.க. ஆட்சியின் உள்ளாட்சித்துறை ஊழல்களும் முதலமைச்சரும், உள்ளாட்சித்துறை அமைச்சரும் கூட்டு வைத்து அடித்த கொள்ளைகளும் மக்கள் மன்றத்திற்கு வரத்தான் போகிறது.

"சீப்பை ஒழித்து விட்டால் திருமணம் நின்று விடும்" என்ற முதலமைச்சர் திரு.பழனிசாமியின் கனவும், உள்ளாட்சித்துறை அமைச்சர் திரு வேலுமணியின் கனவும் நிச்சயம் மக்கள் சக்தியால் கலைக்கப்பட தான் போகிறது என்று தெரிவித்துக் கொள்கிறேன்" என அறிக்கை விடுத்துள்ளார்.

Similar News