மேற்கு வங்கத்தில் தாமரை மலரச்செய்யும் வரை நான் தூங்க மாட்டேன்.. மம்தா கட்சியில் இருந்து விலகிய அமைச்சர் சபதம்.!

மேற்கு வங்கத்தில் தாமரை மலரச்செய்யும் வரை நான் தூங்க மாட்டேன்.. மம்தா கட்சியில் இருந்து விலகிய அமைச்சர் சபதம்.!

Update: 2020-12-25 17:36 GMT

மேற்குவங்கத்தில் தாமரையை மலரச் செய்யும் வரை நான் தூங்க மாட்டேன் என்று முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய முன்னாள் அமைச்சர் சுவேந்து அதிகாரி சபதம் செய்துள்ளார்.

மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்கிரஸ் அரசில் முக்கிய அமைச்சராக இருந்த சுவேந்து அதிகாரி பதவியை ராஜினாமா செய்தார். பின்னர் எம்.எல்.ஏ., பதவியையும் ராஜினாமா செய்வதாக கடிதம் அனுப்பிய அவர், கொல்கத்தாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா முன்னிலையில் பா.ஜ.க.வில் தன்னை இணைத்துக்கொண்டார்.

ஏப்ரல் அல்லது மே மாதத்தில் மேற்குவங்கத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதையடுத்து, அரசியல் கட்சியினர் இப்போதிருந்தே தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கிழக்கு மிட்னாபூர் மாவட்டம் கொந்தாய் என்ற இடத்தில் பா.ஜ.க., பொதுக்கூட்டத்தில் சுவேந்து அதிகாரியும், மாநில பா.ஜ.க., தலைவர் திலீப் கோஷ்ம் பங்கேற்றனர்.

அப்போது சுவேந்து அதிகாரி பேசியதாவது: தற்போது நானும், திலீப் கோஷும் இந்த கூட்டத்திற்கு வந்துள்ளோம். இங்கே, திரிணாமுல் காங்கிரஸ்காரர்கள் யாராவது இருந்தால் ஓடி விடுங்கள். இது சாதாரண புயல் தான். அடுத்த ஆண்டு சட்டசபைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் சுனாமி அலை வெகுண்டெழும்.

மே.வங்க மாநிலத்தில் தாமரையை மலரச் செய்யும் வரை நான் தூங்க செல்ல மாட்டேன். இந்த மாநில மக்கள் திரிணாமுல் காங்கிரஸ் அரசை வேரோடு பிடுங்கி எறிய தயாராகியுள்ளனர். இவ்வாறு அவர் பேசினார்.

Similar News