'மக்கள் காங்கிரசை மாற்று சக்தியாக காணவில்லை' - கபில் சிபல் சாடல்.!
'மக்கள் காங்கிரசை மாற்று சக்தியாக காணவில்லை' - கபில் சிபல் சாடல்.!
2019 பொதுத் தேர்தல்களின் தோல்விக்குப் பிறகு காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராக ராகுல் காந்தி ராஜினாமா செய்தார். அதன்பிறகு இடைக்கால தலைவராக ஒரு வருடத்திற்கும் மேலாக சோனியாகாந்தி நீடிக்கிறார். அதன் பிறகு நடந்த பல தேர்தல்களில் காங்கிரஸ் கட்சிக்கு தோல்வி மேல் தோல்வி ஆகவும், அடிமேல் அடி ஆகவும் விழுந்து வந்தது.
காங்கிரஸ் கட்சியின் மீது உள்ள தங்கள் பிடிப்பை காந்தி குடும்பம் விட்டுக் கொடுக்கவோ, காங்கிரஸ் காரியக் கமிட்டியின் பொறுப்புகளுக்கு தேர்தல் வைத்து உட்கட்சி ஜனநாயகத்தை வளர்க்கவோ தயாராக இல்லை. கிட்டத்தட்ட எந்த ஒரு ஆய்வும் செய்து அதிரடி மாற்றங்களை கொண்டு வரவும் இல்லை. மாற்று எதிர்க் கட்சியாக காங்கிரஸை வளர விடாமல் இவை தான் தடுப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகிறார்கள்.
இதுகுறித்து காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே பல முணுமுணுப்புகளும், விமர்சனங்களும் வரத்தொடங்கியது. சஞ்சய் ஜா என்ற காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் இது குறித்து தலைமையிடம் கேள்வி எழுப்பியதற்காக கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். எப்போதும் இல்லாத விதமாக 23 முக்கியமான காங்கிரஸ் தலைவர்கள் தங்கள் கருத்துக்களை கடிதமாக எழுதி காங்கிரஸ் தலைமையிடம் சமர்ப்பித்தனர்.
ஆனால் சோனியா காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சி இதற்கு மறைமுகமாக, கடும் நடவடிக்கைகளை தலைவர்கள் மீதே மேற்கொண்டது. அதற்கு அடுத்த அளிக்கப்பட்ட பதவிகளில் கடிதங்கள் எழுதியவர்களை உதாசீனப்படுத்தியதை, மற்ற காங்கிரஸ் தலைவர்கள் அவர்களை கண்டித்தது, அந்த கடிதத்தின் மீது வேறு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தது எனப் பல.
இந்நிலையில் உலகத்தையே உலுக்கி வந்த கொரானா வைரஸ் தொற்றுநோய் மற்றும் ஊரடங்கு மத்தியில் பீகார் சட்டமன்ற பொதுத்தேர்தல் மற்றும் நாடு முழுவதும் பல இடைத்தேர்தல்கள் சேர்ந்து நடந்து முடிவுகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டன. அதில் பா.ஜ.க வெற்றி வாகை சூடியது.
அக்கடிதம் எழுதியவர்களில் முக்கியமான காங்கிரஸ் தலைவரான கபில் சிபல், நேற்று பீகாரில் காங்கிரஸ் தோல்விக்குப் பிறகு காங்கிரஸ் தலைமையை மறுபடியும் சாடினார். மக்கள் காங்கிரஸ் கட்சியை ஒரு மாற்றாக பார்ப்பதில்லை என்றும் கட்சி எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு கட்சித்தலைமை தீர்வு காணவில்லை எனவும் குற்றம் சாட்டினார்.