2018ல் மூன்றாவது இடம், 2020ல் வெற்றி - தெலுங்கானா இடைத்தேர்தலில் ஆளுங்கட்சியையே வீழ்த்தி பா.ஜ.க. சாதனை.!
2018ல் மூன்றாவது இடம், 2020ல் வெற்றி - தெலுங்கானா இடைத்தேர்தலில் ஆளுங்கட்சியையே வீழ்த்தி பா.ஜ.க. சாதனை.!
இன்றைக்கு, பீகார் மாநில சட்ட மன்றத் தேர்தல் முடிவுகளும் குஜராத், கர்நாடகா, மணிப்பூர், மத்தியப்பிரதேசம், தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களின் இடைத் தேர்தல் முடிவுகளும் வெளிவந்த வண்ணம் உள்ளன.
பீகார் சட்டமன்ற தேர்தலில் அனைத்து முடிவுகளும் வெளிவர பின்னிரவு வரை ஆகலாம் என்று தேர்தல் கமிஷன் அறிவித்துள்ள நிலையில் மற்ற இடைத்தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
குஜராத்தில் நடைபெற்ற 8 தொகுதிகளிலும் பா.ஜ.க முன்னணியில் உள்ளது. மத்திய பிரதேசத்தில் 28 தொகுதிகளில் 20 தொகுதிகளுக்கும் மேல் முன்னிலையில் உள்ளது. கர்நாடகாவிலும் தனது ஆட்சியை தக்க வைத்துக் கொண்டுள்ளது. கொரானா பரவல் சமயத்தில் நாடு முழுக்க பா.ஜ.கவுக்கு ஆதரவு அலை வீசி வருகிறது.
இதில் தெலுங்கானாவில் ஒரே ஒரு தொகுதிக்கு நடந்த இடைத் தேர்தல் முடிவுகள் பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளன. ஏனெனில் மற்ற மாநிலங்களில் எல்லாம் பெரும்பாலும் பா.ஜ.க ஆளும் கட்சியாக உள்ளது.
ஆனால் தெலுங்கானாவில் இரண்டாவது எதிர்க்கட்சியாக இருக்கிறது. தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியின் (TRS) MLA திடீரென மரணம் அடைந்ததால் ஏற்பட்ட காலியிடத்தை நிரப்ப நடந்த இடைத் தேர்தலில் எதிர்க்கட்சியான பா.ஜ.க வெற்றி பெற்று இருப்பது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
பொதுவாகவே இடைத்தேர்தல்களில் ஆளும் கட்சி ஆதிக்கம் செலுத்தும் என்பது இந்திய அரசியலில் ஒரு எழுதப்படாத விதியாகவே இருக்கிறது. இத்தனைக்கும் TRS சார்பாக நின்றது, இறந்து போன MLA வின் மனைவி. இது போன்ற சமயங்களில் அனுதாப அலை வீசுவதும் சகஜம். தன்னுடைய ஆளும்கட்சி பலத்தையும் இடைத்தேர்தலில் காட்டியும் ராஷ்ட்ரிய சமிதி கட்சி ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் பா.ஜ.க வேட்பாளரிடம் தோல்வி அடைந்திருப்பது சந்திரசேகர ராவின் பெயருக்குக் கிடைத்துள்ள பெரும் பின்னடைவாக காணப்படுகிறது.