அடுத்த இலக்கு மேற்கு வங்கம் - உத்வேகத்துடன் களம் இறங்கும் பா.ஜ.க.!
அடுத்த இலக்கு மேற்கு வங்கம் - உத்வேகத்துடன் களம் இறங்கும் பா.ஜ.க.!
பா.ஜ.க இது வரை வெற்றி பெறாத இடங்களில் அடித்தளத்தை உருவாக்கி, தொண்டர் பலத்தை சேர்த்து, மக்கள் ஆதரவைப் பெற்று ஆட்சியைப் பிடிப்பதில் தீவிரமாக இருப்பதை நாம் அனைவரும் அறிவோம். அதில் படிப்படியாக ஒவ்வொரு மாநிலத்திலும் மாற்று சக்தியாக மாறி, பிறகு ஆளும் கட்சியாக மாறி வருகிறது.
தற்போது பீகாரில் ஆட்சியை தக்க வைத்துக் கொண்டதோடு, கூட்டணிக் கட்சியான ஐக்கிய ஜனதா தளத்தை விட அதிக இடங்களில் வெற்றி பெற்று அதிக ஆதிக்கம் செலுத்தும் ஒரு கூட்டணிக் கட்சியாக உருவெடுத்துள்ளது.
இதற்கு அடுத்த படியாக 2021 மே மாதங்களில் நடைபெறும் சட்டமன்றத் தேர்தல்களில், மேற்கு வங்காளத்தில் ஆளும் கட்சியாக மாறுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது.
கிழக்கு மாநிலங்களின் மிகப்பெரிய பரிசு பா.ஜ.கவுக்கு கிடைக்குமா?
மேற்கு வங்காளம் பீகாரோடும் ஒரு எல்லையை பகிர்ந்து கொள்கிறது. பீகார் சட்டமன்ற தேர்தல்களில் தொடர்ந்து வெற்றி பெறுவதன் மூலம், கட்சி பெற்றிருக்கும் வேகம் மேற்கு வங்கத்திலும் அதன் வாய்ப்புகளுக்கு மேலும் உதவும் என்று பா.ஜ.க நம்புகிறது.
முதல் அமைச்சர் மம்தா பானர்ஜியின் கோட்டையை உடைத்து, மேற்கு வங்கத்தை கைப்பற்றுவதற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் முன்னெப்போதும் இல்லாத வகையில் பா.ஜ.கவில் கடும் முயற்சி நடந்து வருகிறது.
வங்காளத்தின் முக்கியத்துவம்:
தெற்கு மற்றும் கிழக்கு இந்தியாவில் சில மாநிலங்களைத் தவிர கடந்த 30 ஆண்டுகளாக பா.ஜ.க எல்லாப் பகுதிகளிலும் ஏதாவது ஒரு கட்டத்தில் ஆட்சியில் இருந்துள்ளது. 2020 இல் நடந்த அனைத்துத் தேர்தல்களிலும் வெற்றி வாகை சூடி உத்வேகம் பெற்று இருக்கும் பா.ஜ.க, ராஜஸ்தானை தவிர மற்ற ஹிந்தி பெல்ட் மாநிலங்களைத் தற்போதைக்கு கட்டுப்படுத்துகிறது.