ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரம் ஒரு பக்கம் தீவிரமடைந்துள்ள நிலையில், பாரதிய ஜனதா கட்சிக்கு ஊக்கமளிக்கும் விதமாக, கோவாவில் நடத்த உள்ளாட்சித் தேர்தலில் பா.ஜ.க மகத்தான வெற்றி பெற்றுள்ளது. கோவாவில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியினர் பனாஜி மாநகர கார்ப்பரேஷனில் 30 வார்டுகளில் 25 வார்டுகளை வென்றது. முன்னதாக ஆறு நகராட்சி மன்றங்கள், பனாஜி மாநகரம், ஒரு ஜில்லா பஞ்சாயத்து மற்றும் 22 பஞ்சாயத்து வார்டுகளில் கடந்த சனிக்கிழமை வாக்குப்பதிவு நடைபெற்றது. மாநில தேர்தல் ஆணையத்தின் கூற்றுப்படி, மொத்தம் 82.59 சதவீத வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்துள்ளனர்.
கனகோனா, கர்கோரெம்-ககோரா, பிச்சோலிம், கன்கோலிம், வால்போய் மற்றும் பெர்னெம் ஆகிய ஆறு நகராட்சி மன்றங்களுக்கும் பனாஜி மாநரகத்திற்கும் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் பனாஜி நகரம் மிகக் குறைந்த அளவாக 70.19 சதவீத வாக்குகளைப் பதிவு செய்தது. பெர்னெம் நகராட்சி மன்றம் மிக அதிகமாக 91.02 சதவீத வாக்குகளை பதிவு செய்துள்ளது. கர்கோரெம்-ககோரா, பிச்சோலிம், கன்கோலிம் மற்றும் வால்போய் கவுன்சில்கள் முறையே 80.24 சதவீதம், 87.96 சதவீதம், 76.35 மற்றும் 85.50 சதவீத வாக்குகளைப் பதிவு செய்தன. பனாஜி நகர கார்ப்பரேஷனுக்கான 30 வார்டுகளுக்கு வாக்குப்பதிவு, நவேலிம் ஜில்லா பஞ்சாயத்து தொகுதியில் இடைத்தேர்தல்கள் மற்றும் 22 பஞ்சாயத்து வார்டுகள் ஒரே நேரத்தில் நடைபெற்றன.
பா.ஜ.க வை ஆதரித்த வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார். பிரதமர் மோடி ஒரு ட்வீட்டில், "பாஜகவுக்கு தொடர்ந்து ஆதரவளித்த கோவாவுக்கு நன்றி. நகராட்சித் தேர்தல்கள் 2021 இன் முடிவுகள் எங்கள் கட்சியின் வளர்ச்சி நிகழ்ச்சி நிரலில் மக்கள் பாராட்டுவதைக் காட்டுகின்றன" என்று கூறினார். "மக்கள் மத்தியில் சென்று பிரச்சாரத்தின்போது கடுமையாக உழைத்த பா.ஜ.க ஆதரவாளர்கள் அனைவரையும் நான் பாராட்டுகிறேன்" என்று அவர் கூறினார்.