உலக சுகாதார அமைப்பின் அறிக்கையில் எந்த இடத்திலும் "இந்திய வகை" வைரஸ் என குறிப்பிடவில்லை! திரித்து செய்தியாக்கும் இந்திய ஊடங்கள்!
இந்தியாவில் கொரோனா வைரசின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. கடந்த வாரம் தினசரி பாதிப்பு எண்ணிக்கையானது 4 லட்சத்திற்கும் அதிகமாக பதிவான நிலையில், ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்ட நிலையில், தற்போது குறையத் தொடங்கி உள்ளது.
எனினும் உயிரிழப்பு அதிகமாகவே உள்ளது. இந்த அளவுக்கு வைரஸ் வேகமாக பரவுவதற்கு முக்கியமான காரணம், உருமாற்றம் அடைந்த வைரஸ்தான் என கண்டறியப்பட்டுள்ளது.
இந்தியாவில் கரோனா தொற்று வேகமாகப் பரவுவதற்கு முக்கியக் காரணம் பி.1.617 எனும் உருமாற்றம் அடைந்த கரோனா வைரஸ்தான். கடந்த அக்டோபர் மாதம் முதன்முதலில் இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த வைரஸ்தான் தற்போது உலக சுகாதார அமைப்பின் 6 மண்டலங்களில் உள்ள 44 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை 4,500 மாதிரிகளில் கண்டறியப்பட்டதாக உலக சுகாதார அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.
பி.1.617 உருமாறிய வைரஸ் பிரிட்டனில்தான் அதிகமாகக் கண்டறியப்பட்டுள்ளது என உலக சுகாதார அமைப்பின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய வகை உருமாறிய கொரோனா தொற்றான பி.1.617, சர்வதேச அளவில் கவலை அளிப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்திருந்ததை ஏராளமான ஊடகங்கள் செய்தி அறிக்கையாக வெளியிட்டிருந்தன. ஒரு சில கட்டுரைகள், பி.1.617 என்ற கொரோனா தொற்று வகையை, "இந்திய வகை" என்று குறிப்பிட்டிருந்தன.
இது போன்ற செய்தி அறிக்கைகள், எந்த ஆதாரமும் இல்லாதவை. தனது 32 பக்க ஆவணத்தில் உலக சுகாதார அமைப்பு, கொரோனா தொற்றின் ஒருவகையான பி.1.617 என்பதுடன் "இந்திய வகை" என்ற சொற்களை எங்கும் பயன்படுத்தவில்லை என்பது தெளிவுபடுத்தப்படுகிறது.
இது தொடர்பான அறிக்கையின் எந்த ஒரு இடத்திலும் "இந்திய" என்ற சொல் குறிப்பிடப்படவில்லை.